2025 ஏப்ரல் முதல் புதிய விதிகள்.. UPI முதல் கிரெடிட் கார்டு வரை முக்கிய மாற்றங்கள்.. முழு விபரம் இதோ!
வரும் ஏபரல் 1 முதல் இந்தியாவில் புதிய வங்கி விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. குறிப்பாக யுபிஐ (UPI), ஏடிஎம்மில் (ATM) பணம் எடுத்தல், சேமிப்பு கணக்கு விதிகள், கிரெடிட் கார்டு நன்மைகள் போன்ற பலவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் இந்த மாற்றங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்போது இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
யுபிஐ (UPI)
கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வருகின்றன. அதன்படி யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

அதாவது உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது.
குறிப்பாக செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சேமிப்பு கணக்கு
வரும் ஏப்ரல் 1 முதல் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை முந்தையதை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதுவும் குறைந்தபட்ச இருப்புத் தேவையானது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைப் பொறுத்து மாறுபடும் என்று கூறப்படுகிறது. எனவே சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் அபராதத்தைச் சந்திக்க நேரிடும்.
ஆன்லைன் பேங்கிங்
பல முன்னணி வங்கிகள் தங்கள் ஆன்லைன் சேவைகளை அதிகரித்து வருகின்றன. அதுவும் பல வங்கிகள் தங்களின் வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க AI சாட்போட்களைப் பயன்படுத்துகின்றன. பின்பு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக்க பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் மற்றும் டூ ஃபாக்டர் ஆத்தென்டிஃபிகேஷன் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்படுகின்றன. மேலும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங்கில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கிரெடிட் கார்டு
எஸ்பிஐ, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முக்கிய வங்கிகள், தங்களின் கோ-பிராண்டட் விஸ்டாரா கிரெடிட் கார்டுகளின் பலன்களை மாற்றுகின்றன. குறிப்பாக டிக்கெட் வவுச்சர்கள், ரினீவல் பலன்கள் மற்றும் மைல்ஸ்டோன் ரிவார்ட் போன்ற பலன்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கியும் ஏப்ரல் 18 முதல் இதேபோன்ற மாற்றங்களைச் செயல்படுத்தும், இதனால் அந்த வங்கியின் விஸ்டாரா கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை அதிமாக பாதிக்கும்.

ஏடிஎம்
சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த புதிய விதி மே 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 1 முதல் வாடிக்கையாளர்கள் இலவச வரம்பைத் தாண்டி ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் கூடுதலாக ரூ. 2 செலுத்த வேண்டியிருக்கும். பின்பு இருப்பு விசாரணைகள் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் 1 ரூபாய் அதிகரிக்கும்.
எனவே இனிமேல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.19 செலவாகும். இதற்கு முன்னர் 17 ரூபாயாக இருந்தது. அதேபோல நிதி அல்லாத பரிவர்த்தனைகள் அதாவது இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் போன்றவை சரிபார்க்க ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 7 செலவாகும் இதற்கு முன்னர் 6 ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications








