ஏப்.1 முதல் எல்லாமே மாறுது.. இந்த 3 வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள்? வருகிறது புதிய ATM விதிகள்..
வரும் ஏப்ரல் 1-ம் தேதி பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதிலும் மூன்று முக்கியமான வங்கிகள் பணப்பரிவர்த்தனைகளில் (ஏடிஎம் மற்றும் யுபிஐ விதி) சில முக்கிய மாற்றங்கள் வரப்போவதாகத் தெரிவித்துள்ளன.
அதாவது எச்டிஎப்சி (HDFC), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பந்தன் வங்கி (Bandhan Bank) ஆகிய வங்கிகள் தான் தங்களது ஏடிஎம் மற்றும் யுபிஐ விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளன. இப்போது ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும் இந்த மூன்று வங்கிகளின் முக்கிய மாற்றங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

HDFC வங்கி: எச்டிஎப்சி வங்கி ஆனது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி ஆகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி மொபைல் பேங்கிங், கடன்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.
இந்நிலையில் ஏடிஎம் மையங்களில் யுபிஐ (UPI) சேவை மூலம் பணம் எடுக்கும் வசதியான யுபிஐ ஏடிஎம் வித்ட்ராவல்கள் (UPI ATM Withdrawals) விரைவில் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குள் (Monthly free transaction cap) சேர்க்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் இலவச வரம்பை மீறினால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் வசூலிக்கப்படும்.
ஏடிஎம் மையங்களில் UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் இலவசமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது என அறிவித்துள்ளது HDFC வங்கி . இதுவும் DEPIT கார்டு மூலம் பணம் எடுப்பதைப் போன்றே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆக இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகள் முடிவடையும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். அதுவும் இந்த விதி வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB): இந்த வங்கி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சில குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணப்பரிவர்த்தனை வரம்பை பாதியாகக் குறைத்துள்ளது.
அதன்படி ரூபே என்.சி.எம்.சி. பிளாட்டினம் (உள்நாட்டு மற்றும் சர்வதேசம்), ரூபே பி.என்.பி. பலாஷ், ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்.சி.எம்.சி., மாஸ்டர்கார்டு பிளாட்டினம், விசா கோல்ட் மற்றும் பி.என்.பி. மாஸ்டர்கார்டு பிளாட்டினம் ரைஸ், ரூபே வுமன் பவர் பிளாட்டினம் ஆகிய கார்டுகளுக்கு தினசரி வரம்பு ரூ.50000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிஎன்பி ரூபே செலக்ட் நியோ/எக்செல், ரூபே செலக்ட் டெபிட் கார்டு, விசா சிக்னேச்சர் மற்றும் மாஸ்டர்கார்டு பிசினஸ் டெபிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.75000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு இந்த டெபிட் கார்டு வைத்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிய தொகைகளை ஏடிஎம் மூலம் எடுக்க இனி முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் ஆகும்.
பந்தன் வங்கி (Bandhan Bank): 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த பந்தன் வங்கி. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி ஆரம்பத்தில் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமான தொடங்கி, தற்போது நாடு முழுவதும் 6,300-க்கும் மேற்பட்ட கிளைகளுடன், கிராமப்புற மற்றும் நடுத்தரப் பிரிவினருக்குச் சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பந்தன் வங்கி அறிவித்துள்ள புதிய விதியின்படி, வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணப் பரிவர்த்தனை செய்யலாம். மற்ற வங்கிககளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது, சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு 3 முறையும், மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு 5 முறையும் மட்டுமே இலவச அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வரம்பை மீறினால் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வசூலிக்கப்படும். மேலும் இந்த வரம்பை மீறி பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமல்லாத இதர சேவைகளுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் ஏடிஎம்மில் கார்டை செருகி, பரிவர்த்தனை தோல்வியடைந்தால் (Transaction Decline), அதற்காக ரூ.25 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. எனவே தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய விதிமுறையைத் தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.


Click it and Unblock the Notifications








