இதோ அடுத்த ஆப்பு.. ஆதார் அட்டையில் பெயர் மாற்ற புதிய விதிகள்.. இனி இந்த ஆவணம் கட்டாயம்.. UIDAI அதிரடி!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் () ஆனது ஆதார் அட்டை தொடர்பான விதிகளில் (Aadhaar Card Rules) சில பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த மாற்றங்கள் - குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை பாதிக்க உள்ளது.
இதுவரை, ஆதார் சேர்க்கைக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) கட்டாயமாக இருந்தது. கூடிய விரைவில் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளின் ஆதார் சேர்க்கைக்குமே பிறப்பு சான்றிதழ் ஆனது கட்டாயமாகலாம் என்பது போல் தெரிகிறது.

யுஐடிஏஐ ஏன் இந்த திடீர் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறது? ராய்ப்பூரில் நடந்த ஒரு வொர்க்ஷாப்பில் பேசிய யுஐடிஏஐ-யின் தலைமை நிர்வாக அதிகாரி (UIDAI CEO) ஆன புவனேஷ் குமார், இந்தியாவில் தினமும் சுமார் 75,000 புதிய ஆதார் விண்ணப்பங்கள் பெறுவதாக தெரிவித்தார்.
ஆச்சரியப்படும் விதமாக, இவற்றில் 98% ஆனது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இருந்து வருகின்றன. அதாவது புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே உள்ளது. இந்த "மாற்றம்" கடுமையான ஆதார் சரிபார்ப்பு விதிமுறைகளை (Aadhaar Verification norms) தூண்டி உள்ளது.
இதன் விளைவாக குழந்தைகளுக்கான பெயர் மாற்றங்களை சுற்றியுள்ள ஆதார் விதிகளை கடுமையாக்க யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் பிறப்பு சான்றிதழின் படி மட்டுமே எந்தவொரு பெயரும் புதுப்பிக்கப்பட அனுமதிக்கப்படும். அதாவது பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் ஆதார் பதிவுகளுக்கு இறுதியானதாக இருக்கும் - இது பிழைகள், தவறான பயன்பாடு மற்றும் அடையாள மோசடியைக் குறைக்கும்.
பிறந்த தேதி ஒருமுறை மட்டுமே: முகவரி மற்றும் மொபைல் எண் புதுப்பிப்புகள் தான் ஆதார் மாற்றங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. மக்கள் அடிக்கடி மொபைல் எண்களை மாற்றுகின்றன. யுஐடிஏஐ ஆனது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 23 கோடி புதுப்பிப்பு கோரிக்கைகளை பெறுகிறது. அதாவது இந்த எண்ணிக்கை தினமும் கிட்டத்தட்ட 7.5 லட்சம் புதுப்பிப்புகளை பெறுவதற்கு சமம். இருப்பினும், பிறந்த தேதியை ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
போலி ஆதார் அட்டைகளை நிறுத்த ஏஐ: போலி ஆதார் உருவாக்கத்தைத் தடுக்க, யுஐடிஏஐ ஆனது ஏஐ (AI) மற்றும் மெஷின் லேர்னிங்கை (Machine Learning) பயன்படுத்துகிறது. வலுவான பயோமெட்ரிக் சோதனைகள் ஒரு நபர் பல ஆதார் அட்டைகளை பெற முடியாது என்பதை உறுதி செய்கின்றன. பெரிய அளவிலான பெயர் மாற்றங்களுக்கு இப்போது கஸாட் நோட்டிபிகேஷன் (Gazette notification) தேவைப்படுகிறது, இது அடையாளம் தவறாக பயன்படுத்தப்படுவதை கடினமாக்குகிறது.
மேலும் யுஐடிஏஐ ஆனது பிஸிக்கல் ஆவணங்களிலிருந்து ஆன்லைன் சரிபார்ப்பை நோக்கி நகர்கிறது. பல மாநிலங்களின் பிறப்புச் சான்றிதழ் தரவு ஏற்கனவே ஆதார் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேகமான மற்றும் துல்லியமான சரிபார்ப்புக்காக சிபிஎஸ்இ (CBSE) மதிப்பெண் பட்டியல்கள், பான் (PAN) அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்கள் போன்ற தரவுத்தளங்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அக்டோபர் மாதத்திற்குள், 1 லட்சம் ஆதார் மையங்களில் புதிய மென்பொருள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது க்யூஆர்-குறியீடு அடிப்படையிலான ஆவண ஸ்கேனிங் மூலம் போலி ஆவணங்களை உடனடியாக கண்டறிய உதவும். மேலும் முக அங்கீகாரம் போன்ற அம்சங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே சரிபார்ப்பை முடிக்க அனுமதிக்கும்.
மேற்கண்ட ஆதார் தொடர்பான விதிகள் கடுமையாகத் தோன்றினாலும், இந்த மாற்றங்கள் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்ட கால ஸ்டோரேஜிற்கு இன்றியமையாதவை என்று யுஐடிஏஐ கூறுகிறது, ஆதார் அடிப்படையிலான நேரடி மானியம் ஆனது அரசாங்கத்திற்கு அதன் இயக்கச் செலவை விட 40 மடங்கு அதிகமாக சேமிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








