முடிஞ்சுது போங்க.. UPI வழியாக பணம் அனுப்ப கட்டணம்.. யார் செலுத்த வேண்டும்? RBI ஆளுநர் புது விளக்கம்!
யுபிஐ (UPI) பயனர்கள், விரைவில் யுபிஐ வழியிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் (UPI Payment Charge) செலுத்த வேண்டியிருக்கும் என்கிற சலசலப்புக்கு மத்தியில்.. "பஞ்சாயத்து முடிஞ்சது போங்க" என்று கூறும்படியாக, ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா (RBI Governor Sanjay Malhotra) ஒரு புதிய விளக்கத்தை வெளியிட்டு உள்ளார்.
உண்மையில் இந்த சலசலப்பை கிளப்பி விட்டதே இவர் தான். கடந்த ஜூலை மாத இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆன சஞ்சய் மல்ஹோத்ரா யுபிஐ சேவை ஆனது விரைவில் கட்டண சேவையாக மாறும், யுபிஐ வழியாக பணப்பரிமாற்றம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை சூசகமாக கூறி இருந்தார்.

யுபிஐ சேவையானது புதிய உயரங்களை எட்டியுள்ள நிலையில், இந்த அமைப்பை நிதி ரீதியாக நிலையானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஆர்பிஐ ஆளுநர், இந்த அமைப்பை இலவசமாக வைத்திருக்க அரசாங்கமானது, வங்கிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களுக்கு மானியம் வழங்கி வருவதாகவும், ஆனால் செலவுகள் செலுத்தப்பட வேண்டும்; யாராவது அந்த செலவை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்
இந்த கருத்து தான் - "இலவச யுபிஐ சேவை முடிவுக்கு வருகிறது", "விரைவில் யுபிஐ வழியாக பணப்பரிமாற்றம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும்" என்கிற பேச்சுகள் அடிபட முக்கிய காரணமானது. இதற்கிடையில் தான் ஆர்பிஐ ஆளுநர் ஆன சஞ்சய் மல்ஹோத்ரா தான் சொன்ன கருத்துக்கான புதிய விளக்கத்தை வெளியிட்டு உள்ளார்.
யுபிஐ சேவையின் நிலைத்தன்மையை பராமரிக்க "யாராவது" பணம் செலுத்த வேண்டியிருக்கும் தான். ஆனால் அதற்கு "பயனர்கள்' பணம் செலுத்துவார்கள் என்று அர்த்தமல்ல என்று ஆர்பிஐ ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
"யார் பணம் செலுத்துகிறார்கள் என்பது முக்கியம், ஆனால் ஒருவர் பில் செலுத்துவது அவ்வளவு முக்கியமல்ல. நிலைத்தன்மைக்கு, கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ, யாரோ ஒருவர் செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கு மானியம் வழங்குகிறது... பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை," என்று பணவியல் கொள்கைக் குழு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும் போது மல்ஹோத்ரா தெளிவுபடுத்தி உள்ளார்.
இதேபோல முன்னதாக ரூ.2,000க்கு மேல் உள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஸ்டி வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்கிற தகவலும் காட்டுத்தீ போல பரவியது. "இது உண்மையா?" என்று மாநிலங்களவை உறுப்பினர் ஆன அனில் குமார் யாதவ் கேள்வி எழுப்ப, அதற்கு நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி தெளிவாக பதில் அளித்து இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகின்றன. அத்தகைய பரிந்துரை எதுவும் வரவில்லை என்றும் அவர் பதிலளித்தார். அதாவது ரூ.2000 க்கு மேல் யுபிஐ பேமண்ட் செய்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்கிற எந்த விதியும் அமலுக்கு வரப்போவதில்லை என்று நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி பதில் அளித்து இருந்தார்.
இணை அமைச்சர் குறிப்பிட்டபடி ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகள் ஆனது ஜிஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன, இது மத்திய மற்றும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்களை கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். அப்படியான ஜிஸ்டி கவுன்சிலிடம் இருந்து ரூ.2000 மதிப்பிலான யுபிஐ பணபரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த வார்த்தையும் இல்லை.


Click it and Unblock the Notifications








