NASA எச்சரிக்கை: ஜூலை 24 பூமியை கடக்கும் சிறுகோள் ஏன் ஆபத்தானது? தெளிவான விளக்கம்!
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்பொழுது புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி வரும் ஜூலை 24 அன்று, மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் 170 மீட்டர் நீளமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் என்று நாசா எச்சரித்துள்ளது.

சிறுகோள் 2020 ND எனப்படும் ஒரு பெரிய அளவு சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 0.034 வானியல் அலகுகள், அதாவது, 5,086,328 கிலோமீட்டர் என்ற தொலைவில் பூமியை கடந்து செல்கிறது. பூமிக்கு மிக மிக அருகாமையில் இந்த சிறுகோள் கடந்து செல்வதால் அபாயகரமான சிறுகோள்கள் பிரிவின் கீழ் இந்த சிறுகோள் சேர்க்கப்பட்டுள்ளது. 5,086,328 கிலோமீட்டர் என்பது வானியல் கணக்கின்படி பூமிக்கு மிக அருகிய தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் கூற்றுப்படி, "பூமிக்கு அச்சுறுத்தும் நெருக்கமான அணுகுமுறைகளை உருவாக்கும் சிறுகோளின் திறனை அளவிடும் அளவுகளின் அடிப்படையில் தற்போது அபாயகரமான சிறுகோள்கள் என்று (Potentially Hazardous Asteroids-PHA) வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 0.05 வானியல் அலகுகள் அல்லது அதற்கும் குறைவான சுற்றுப்பாதை குறுக்குவெட்டு தூரம் (MOID) கொண்ட அனைத்து சிறுகோள்களும் PHA களாக கருதப்படுகின்றன".

நாசா இதுபோன்ற பொருள்களை ‘பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள்' (Near-Earth object - NEO) என வகைப்படுத்துகிறது, ஏனெனில் இவை மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை ஈர்ப்பால் பாதிக்கப்படுகின்றன, இதன் விளைவாக அவை நமது சூரிய மண்டலத்திற்கு அருகாமையில் உள்ளன.அப்படியிருந்தும், PHA என்று வகைப்படுத்தப்பட்ட சிறுகோள்கள் அனைத்தும் பூமியைத் தாக்கும் அல்லது பாதிக்கும் என்பது பொருளில்லை.

இதன் பொருள் PHA என்ற வகைப்படுத்தப்பட்ட இந்த சிறுகோள்கள் அத்தகைய அச்சுறுத்தலுக்கான சாத்தியத்தை உருவாக்க வாய்ப்புள்ளது என்பதாகும். இந்த PHA களைக் கண்காணிப்பதன் மூலமும், அவற்றின் வழிப்பாதையைப் புதுப்பிப்பதன் மூலமும், நெருக்கமான அணுகுமுறை புள்ளிவிவரங்களையும் அவற்றின் தாக்குதல் அச்சுறுத்தலையும் நாம் கணிக்க முடியும் என்று நாசா கூறியுள்ளது.

தி பிளானட்டரி சொசைட்டி யின் கணக்குப் படி, 1 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட சுமார் 1 பில்லியன் சிறுகோள்கள் பூமியைச் சுற்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் தாக்கத்தை அல்லது குறிப்பிடத்தக்கச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் 30 மீட்டரை விட பெரியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 30 சிறிய சிறுகோள்கள் பூமியைத் தாக்குகிறது, ஆனால் இவற்றால் எந்தவித பெரிய சேதமும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அருகிலுள்ள வானியல் பொருள் கண்காணிப்பு திட்டத்தின்(NASA's Near-Earth Object Observations Program) படி, 140 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீளத்தை உடைய, 90 சதவீதத்திற்கும் அதிகமான சிறுகோள்களை நாசா கண்டறிந்து, கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 140 மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்ட எந்த ஒரு சிறுகோளும் அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பூமியைத் தாக்கது என்று நாசா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications