NASA தேர்வு செய்த கரூர் மாணவர்களின் செயற்கைக்கோள்.! விண்ணில் பாயப்போவது எப்போது தெரியுமா?
கரூரை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சோதனை செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் பூமியின் துணை சுற்றுப்பாதை இடத்தில் செலுத்த தற்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் உருவாக்கிய சோதனை செயற்கைக்கோள் நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு அனைவரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

தீவிரமான விண்வெளி ஆராய்ச்சி
இரண்டு ஆண்டுகளுக்கு மேலான தீவிரமான விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புடன் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. தாந்தோன்ரிமலையைச் சேர்ந்த எம். அட்னான், மலைகோவிலூருக்கு அருகிலுள்ள நாகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எம். கேசவன் மற்றும் தென்னிலை பகுதியைச் சேர்ந்த வி.அருண் ஆகியோர் இணைந்து இந்த செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.

NASAவின் 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' போட்டி
நாசாவுடன் இணைந்து ஐடுட்லெடு (Idoodledu) இன்க் நிறுவனம் இணைத்து நடத்திய, உலகளாவிய 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' போட்டியில் கரூர் மாணவர்களின் இந்த செயற்கைக்கோள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான தொழில்நுட்பத்துடன் இந்த செயற்கைக்கோளை இவர்கள் உருவாக்கியுள்ளனர். செயற்கைக்கோளை வடிவமைக்கத் தொடங்கியபோது இவர்கள் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
இப்போது இளங்கலை படிப்புகளைத் தொடரும் மாணவர்களின் உறுதியும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் அவர்களுக்கு நாசாவுடன் கூட்டு சேர ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்பொழுது நமது நாட்டிற்கு இந்த பெருமையைச் சேர்த்துள்ளனர். விண்வெளி விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அவர்களின் செயற்கைகோள் உருவாக்கத்திற்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

3 செ.மீ அளவு மற்றும் 64 கிராம் எடை
வலுவூட்டப்பட்ட கிராபென் பாலிமரால் செய்யப்பட்ட இவர்களின் செயற்கைக்கோள் 3 செ.மீ அளவு மற்றும் 64 கிராம் எடை கொண்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு சிங்னளை அனுப்பவும், பெறவும் அதன் சொந்த ரேடியோ அதிர்வெண் தொடர்பை இது கொண்டுள்ளது. செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலங்கள் அதற்கான சக்தியை உருவாக்குகின்றன.

விண்ணில் பாயப்போவது எப்போது?
புகைப்பட சென்சார்கள் ராக்கெட்டுக்குள் இருக்கும் அண்ட கதிர்வீச்சை உறிஞ்சி அளவிடும். இந்தியன் சேட் என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் அடுத்த ஜூன் மாதத்தில் நாசாவின் சவுண்டிங் ராக்கெட் 7 மூலம் பூமியின் துணை சுற்றுப்பாதைக்குச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நாடுகள் பங்குபெற்ற போட்டியில் கரூர் மாணவர்களின் செயற்கைக்கோள் தேர்வு செய்யப்பட்டதற்கு இணையத்தில் இப்பொழுது பாராட்டுக்கள் குவிந்துள்ளது.


Click it and Unblock the Notifications