அரிய வகை சூரிய கிரகணம்.. தேதியை குறிச்ச NASA விஞ்ஞானிகள்.. பூமி இருளும் நேரத்தில்.. 3 ராக்கெட் பாயும்.. ஏன்?
அரியவகை முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) ஒன்று, இந்த ஏப்ரல் மாதத்தில் நிகழவுள்ளது. அது எப்போது நிகழும்? இது ஏன் அரியது? இந்த சூரிய கிரகணத்தை குறிவைத்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா என்ன செய்ய திட்டமிட்டுள்ளது? இதோ விவரங்கள்:
இந்த அரியவகை சூரிய கிரகணம் எப்போது நிகழும்? நாசா (NASA) விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது 2024 ஏப்ரல் 8 ஆம் தேதியன்று நிகழவுள்ளது. மேலும் இந்த சூரிய கிரகணம் கடந்த ஆகஸ்ட் 2017 இல் நடந்ததை விட மிக நீளமான சூரிய கிரகணமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி நாசாவின் கூற்றுப்படி இன்னும் 20 ஆண்டுகளுக்கு இதேபோன்ற ஒரு முழு சூரிய கிரகணம் நடக்கவே நடக்காது. அதாவது அமெரிக்காவில் அடுத்த முழு சூரிய கிரகணம் 2044 வரை நிகழாது என்று நாசா தெரிவித்துள்ளது. எனவே இந்த சூரிய கிரகணம் நாசா விஞ்ஞானிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு விண்வெளி நிகழ்வாகும்.
முழு சூரிய கிரகத்தை சுற்றியுள்ள பலவகையான புதிர்கள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடைகளை வழங்கும் தரவுகளை சேகரிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். நினைவூட்டும் வண்ணம் கடந்த 150 ஆண்டுகளில் அமெரிக்காவில் மொத்தம் பதினைந்து முழு சூரிய கிரகணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூரிய கிரகணத்தின் போது நாசா என்ன செய்யவுள்ளது? ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணத்தின் போது வர்ஜீனியாவில் உள்ள அதன் வாலோப்ஸ் ஃபிளைட் ஃபெலிசிலிட்டியில் (Wallops Flight Facility) இருந்து மூன்று சவுண்டிங் ராக்கெட்டுகளை (Sounding Rockets) விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகள் இந்த சவுண்டிங் ராக்கெட்டுகளை ஏபிஇபி (APEP) என்று சுருக்கமாக அழைக்கிறன்றனர். இதன் விரிவாக்கம் - அட்மாஸ்பியரிக் பெர்ட்ரப்ரேஷன்ஸ் அரவுண்ட் எக்லிப்ஸ் பாத் (Atmospheric Perturbations around Eclipse Path) ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த ராக்கெட்டுகள் கிரகண பாதையை சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.

இந்த ராக்கெட்டுகள், ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கும் முழு சூரிய கிரகணம் "உச்சம்" அடைவதற்கு (அதாவது சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்) 45 நிமிடங்களுக்கு முன்பும், முழுமையாக தெரியும் போதும் மற்றும் அதற்கு 45 நிமிடங்களுக்கு பிறகும்.. ஒவ்வொன்றாக விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதன் மூலம், குறிப்பிட்ட சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியின் திடீர் மங்கலானது (Sudden dimming of sunlight) எவ்வாறு அயனோஸ்பியரில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது (Impacts the ionosphere) மற்றும் தகவல்தொடர்புகளை சீர்குலைக்கும் இடையூறுகளை (Disrupt communications) தூண்டுகிறது என்பது பற்றிய தரவுகளை சேகரிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அயனோஸ்பியர் என்றால் என்ன? அதை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 500 கிலோமீட்டர்களுக்கு இடையில் அமைந்துள்ள பகுதிதான் அயனோஸ்பியர். இதை வளிமண்டலத்தில் உள்ள மின்மயமாக்கப்பட்ட பகுதி (Electrified region) என்றும் கூறலாம்.
இது ரேடியோ சிக்னல்களுக்கான (Radio signals) பிரதிபலிப்பு மற்றும் ஒளிவிலகல் ஊடகமாக (Reflective and refractive medium) செயல்படுகிறது. இதன் மூலம் அயனோஸ்பியர் வழியாக சிக்னல்கள் பயணிக்கும் போது, அது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை ( satellite communications) கணிசமாக பாதிக்கிறது.
இதற்காக நாசா விஞ்ஞானிகள் என்ன செய்ய போகிறார்கள்? அயனோஸ்பியர் பூமிக்கு மேலே உள்ள ஒரு பாதுகாப்பு அடுக்கு போன்றது. இது நமது வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் ஒரு தடையாக செயல்படுகிறது. மேலும் இது சூரியனின் ஆற்றலால் (Sun's energy) சார்ஜ் செய்யப்படும் துகள்களால் நிரம்பியுள்ளது.
சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் (Charged Particles) ஆனது இரவு நேரங்களில் அமைதியாகி, மீண்டும் நடுநிலையாக மாறும். ஆனால் பூமியின் வானிலை மற்றும் பூமியை சுற்றிய விண்வெளி நிகழ்வுகள் போன்ற விஷயங்களானது அயனோஸ்பியரை அசைக்கக்கூடும், இது எப்படி இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினம்.
ஏப்ரல் 8 ஆம் தேதியன்று நடக்கும் முழு சூரிய கிரகணமானது ஒரு திடீர் சூரிய அஸ்தமன விளைவை உருவாக்கும். இதனால் வளிமண்டலத்தில் சிறிய இடையூறுகள் ஏற்படும். இந்த இடையூறுகள் பல்வேறு அதிர்வெண்களின் கீழ் ரேடியோ சிக்னல்களை குழப்பும். இந்த மாற்றத்தை ஆராய்வதன் மூலம், இது தொடர்பான தரவுகளை சேமிப்பதன் மூலம்,பூமியின் தகவல் தொடர்பு எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதை கணிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக நாசா ஏன் சவுண்டிங் ராக்கெட்டுகளை தேர்வு செய்துள்ளது? பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50 முதல் 500 கிலோமீட்டர்கள் வரையிலான உயரத்திற்கு சயின்டிபிக் கருவிகளை (Scientific instruments) கொண்டு செல்லும் திறனை சவுண்டிங் ராக்கெட் கொண்டுள்ளது. இந்த அளவிலான உயரத்தை சயின்ஸ் பலூன்களால் (Science Balloons) எட்ட முடியாது.
அதுமட்டுமின்றி குறிபிட்ட உயரமானது செயற்கைக்கோள்களின் பாதுகாப்பான இயக்க வரம்பிற்கு கீழேயும் (Safe operating range of satellites) உள்ளது. எனவே ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கும் மிகவும் அரியவகை முழு சூரிய கிரகணத்தை ஆராய்வதற்கான சரியான தேர்வு - சவுண்டிங் ராக்கெட்டுகள் தான்!


Click it and Unblock the Notifications