சந்திரன் "தள்ளாட்டம்".. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா? நாசா திடுக்கிடும் தகவல்.!
நாசா விஞ்ஞானிகள் தலைமையிலான ஆராய்ச்சி முடிவின் படி, 2030 களின் நடுப்பகுதியில் கடலோரப் பகுதிகள் அதிக வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் என்று நாசா கூறியுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு வழக்கமான சந்திர சுழற்சியில் ஏற்பட்ட தள்ளாட்டம் காரணமாக நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் நிகழும் கடல் மட்ட அளவு அதிகரிப்பால் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகும் என்று நாசா எச்சரித்துள்ளது.

சந்திரன் தள்ளாட்டம் என்றால் என்ன?
விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு முக்கிய காரணி தான் இந்த சத்திர தள்ளாட்டம். சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட ஒரு வழக்கமான "தள்ளாட்டம்" இது என்று கூறப்படுகிறது. இது கடந்த 18 ஆம் நூற்றாண்டின் போது முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர தள்ளாட்டமானது முடிவு பெற இரண்டு பாதியாக சும்மர் 18.6 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்று நாசா கூறியுள்ளது.

பூமியில் கடல் அலைகளை இயக்க உதவும் சந்திரனின் ஈர்ப்பு
நம் அனைவருக்கும் தெரிந்தது போல், பூமியின் அலைகளை இயக்க சந்திரனின் ஈர்ப்பு விசையானது உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர சுழற்சியின் முதல் தள்ளாட்ட பாதியில், பூமியின் வழக்கமான தினசரி அலைகள் குறைந்து வருகின்றன. இதனால் வழக்கத்தை விடப் பெரிய அலைகள் குறைவாகவும், சிறிய அலைகள் வழக்கத்தை விட அதிகமாகவும் உருவாகின்றன. இதே போல் சந்திர சுழற்சியின் மற்ற பாதியில், நிலைமை அப்படியே தலைகீழாக மாறுகிறது.

சந்திர தள்ளாட்டத்தினால் அதிகரிக்கும் அலைகளின் மாற்றங்கள்
சந்திர சுழற்சியின் இரண்டாம் தள்ளாட்ட பத்தியில், வழக்கத்தைவிட உருவாகும் அலைகளின் நிலைகள் மாற்றமடைகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் பெரிய அலைகள் அதிகமாகவும், சிறிய அலைகள் குறைவாகவும் உருவாகிறது என்று நாசா கூறியுள்ளது. காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தொடர்ச்சியான கடல் மட்ட உயர்வு மற்றும் 2030-களின் நடுப்பகுதியில் சந்திர சுழற்சியின் பெருக்கப் பகுதியின் வருகையின் விளைவாகக் கடலோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்பா?
குறிப்பாக, இந்த வெள்ளப்பெருக்கு அமெரிக்கப் பகுதிகளில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாசா கூறியுள்ளது. இதற்குப் பின்னணியில் புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய நீண்டகால கடல் மட்ட உயர்வும் ஒரு காரணமாக உள்ளது என்று நாசா கூறியுள்ளது. இது பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் கடல் மட்டம் அதிகரிக்கக் காரணமாகிறது என்று நாசா குழு தலைவரும் ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவருமான பென் ஹாம்லிங்டன் தெரிவித்திருக்கிறார்.

2030 முதல் 2040 வரை கடலோரங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளம்
சந்திரனில் இருந்து வரும் இந்த தள்ளாட்ட விளைவு, அலைகளை வேறுபடுத்துகிறது. எனவே இந்த விளைவு கடல் மட்டத்தின் உயர்வுடன் இணைகிறது, மேலும் இது 2030 முதல் 2040 வரையிலான காலகட்டத்தில் குறிப்பாக வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று ஹாம்லிங்டன் கூறியுள்ளார். அலாஸ்காவைத் தவிர்த்து ஒவ்வொரு கடலோர அமெரிக்க மாநிலத்திலும் பிரதேசத்திலும் மொத்தம் 89 டைட் கேஜ் இடங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த 'டைனமிக் விளைவு' ஒட்டுமொத்த கிரகத்திற்கும் பொருந்தும்
அலாஸ்கா போன்ற வடக்கு கடற்கரையோரங்களைத் தவிர இந்த டைனமிக் விளைவு ஒட்டுமொத்த முழு கிரகத்திற்கும் பொருந்தும் என்று நாசா கூறியுள்ளது. இந்த கணிப்பு கடுமையான கடலோர வெள்ளத்திற்கான முந்தைய மதிப்பீடுகளை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் தள்ளுகிறது. நேச்சர் காலநிலை மாற்றம் இதழில் இந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கடல் மட்ட மாற்றத்தைக் கண்காணிக்கும் நாசா அறிவியல் குழுவின் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க நேரம் உள்ளது - NASA
இந்த ஆய்வு அமெரிக்கக் கடற்கரைகளை மையமாகக் கொண்டது, ஆனால் கண்டுபிடிப்புகள் உலகளாவிய கடற்கரைகளுக்குப் பொருந்தும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு அதிகப்படியான மக்களுக்குப் பெரியளவில் உதவும் என்று ஹாம்லிங்டன் கூறினார். இதனால் கடலோர பகுதிகளில் உள்ளவர்கள் முன்பே திட்டமிட மிகவும் உதவும் என்று கூறியுள்ளார். கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடம் மற்றும் குறிப்பிட்ட உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications