இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
ஏப்ரல் 22 ஆம் தேதி ப்ளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் பேட்39 தளத்தில் இருந்து காலை 6:11 மணிக்கு ஏவப்பட உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து சரியாக நடந்தால் 24 மணி நேரத்துக்கும் குறைவாக சுற்றுப்பாதையில் விண்கலம் செல்லும்.

நான்கு விண்வெளி வீரர்கள்
விண்ணுக்கு செல்லும் க்ரூ2 டிராகன் கேப்ஸ்யூலுக்குள் நான்கு விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். நாசா விண்வெளி வீரர்களான ஷேன் கிம்பரோ, மேகன் மெக்ஆர்தர் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) விண்வெளி வீரர் அகிஹிகோ ஹோஷைட், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் ஆகியோர் ஆவார்கள். இந்த நிகழ்வானது ஸ்பேஸ்.காம் மற்றும் நாசா டிவியில் நேரடி கவரேஜ் டியூன் செய்யப்படும் என கூறப்படுகிறது.

நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்
நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து மூன்றாவது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப இருக்கிறது. க்ரூ 2 மிஷன் மூலம் விண்ணுக்கு செல்லும் நான்கு வீரர்களும் அடுத்த 6 மாதம் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பத் திட்டம்
தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.
மனிதர்களுடன் விண்ணுக்குச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்
முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது.

தற்போது க்ரூ-2 ஏவப்பட இருக்கும் நிலையில் கடந்தமுறை க்ரூ 1 மிஷன் மூலம் 4 வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பியுது. பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பாலகன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்ராக்கெட்டின் மூலம் சுற்றுவட்டப்பாதையை அடைந்தனர். க்ரூ1 மிஷன் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியின் ஒரு மைல்கல்லை வெளிப்படுத்துகிறது என ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் கிளின் ஷாட்வெல் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினர்.


Click it and Unblock the Notifications