நல்ல சம்பளம் கொடுக்குறோம்: ஒரே ஒரு போன்கால்., ரூ.8.60 லட்சம் அபேஸ்!
பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அதிக சம்பளம் கொடுக்கிறோம் என கூறி பெண் ஒருவரிடம் ரூ.8,60,597 லட்சத்தை அபேஸ் செய்த சம்பவம் புனேவில் அரங்கேறியுள்ளது.

ஆன்லைன் தளங்களில் வேலை வாய்ப்பு
ஆன்லைன் தளங்களில் வேலை வாய்ப்பு குறித்து பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை, பிரபல நிறுவனத்தில் வேலை என பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்று செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

ஐடி நிறுவனத்தில் பணி
இந்த நிலையில் புனே அருகே உள்ள ஹடப்சரில் வசித்து வரும் 43 வயது பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் வேலை தேடும் ஆன்லைன் தளம் ஒன்றில் தனது ரெஸ்யூம் எனப்படும் சுயவிவரங்களை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

சம்பளம் அதிகமாக கிடைக்கும்
அந்த அழைப்பில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வேலை வேண்டுமென்றால் அந்த பெண்ணை தங்களது இணையதளத்துக்கு சென்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் ரூ.11,91,611 லட்சம் கட்டணமாக செலுத்தும்படி கூறியுள்ளார்.

மர்மநபர் கேட்ட தொகை
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பெண் மர்மநபர் கேட்ட தொகையை அந்த வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் பணம் கிடைத்தவுடன் அந்த நபர் வேலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சந்தேகம் அடைந்த பெண்
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், அந்த நபரை அழைத்து தான் அளித்த முழுத் தொகையையும் மீண்டும் தனக்கு செலுத்தும்படி கேட்டுள்ளார். அந்த பெண் வலியுறுத்தியதையடுத்து ரூ.3,39,014 தொகையை திரும்ப செலுத்தப்பட்டது.

மீதமுள்ள ரூ.8,60,597 தொகை
11 லட்சத்தில் மீதமுள்ள ரூ.8,60,597 தொகையை அந்த பெண் தொடர்ந்து கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு பணம் கிடைக்கவில்லை. அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தவே ஒருக்கட்டத்தில் அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இது அனைத்தும் போலி எனவும் தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸார் விசாரணை
புகாரின் பேரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் தளத்தில் வேலை வாய்ப்பு குறித்து பல்வேறு விளம்பரங்கள் உள்ளது. வெளிநாட்டு வேலை, பிரபல நிறுவனத்தில் வேலை உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தை கூறி ஏமாற்று வேலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதிகாரப்பூர்வ தளங்களை கண்டறிந்து நேர்முகத் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுமக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியதும் அவசியமாகும்.


Click it and Unblock the Notifications