என்னமா யோசிக்கிறாங்க- ஹலோ நான் ஸ்காட்லாந்து பைலட் பேசுறேன்., ஆசிரியையிடம் ரூ. 58 லட்சம் அபேஸ்!
ஸ்காட்லாந்து பைலட் எனக் கூறி பேஸ்புக்கில் ஆசிரியையிடம் நபர் ஒருவர் நட்பாகியுள்ளார். இவர் நூதன முறையை கையாண்டு அந்த பெண்ணிடம் இருந்து ரூ.58 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்கள்
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பண மோசடி செய்து தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதல்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய கதையை நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

கோடிக்கணக்கான பணம் பரிசு
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக ஒருவர் போன் செய்தி இது உங்கள் பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செயல்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். இதே பாணியில் நூதன முறையை கையாண்டு இங்கே மோசடி இடம்பெற்றிருக்கிறது.

மும்பையை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியை
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் கடந்த மே மாதம் முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த லியோ ஜேகப்ஸ் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பாகி உள்ளார். ஆசிரியையிடம் அந்த நபர் தான் பைலட்டாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார். அப்படியே தனக்கு இந்தியாவில் நிலம் வாங்க ஆசை உள்ளது எனவும் ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

4.7 கோடி ரூபாய் கொரியர்
இந்தியாவில் நிலம் வாங்குவதற்காக சுமார் 4.7 கோடி ரூபாய் பணமும் கடிகாரம் மற்றும் பூக்களை ஆசிரியை பெயரில் விமானம் மூலம் கொரியர் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய பணத்தை ஆசிரியையை உரிய நேரத்தில் சென்று வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு தானும் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்பணம் செலுத்த வேண்டும்
அதன்பின் ஆசிரியையின் தொலைபேசி எண்ணுக்கு பெண் ஒருவர் தொடர்புகொண்டு தான் சுங்கத்துறை அதிகாரி எனவும் தங்களின் பெயரில் பார்சல் வந்துள்ளது எனவும் கூறியுள்ளார். அதிக பணம் அதில் இருக்கிறது எனவும் அதற்கு நீங்கள் வரி செலுத்தி முன்பணம் செலுத்தி எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை அதிகாரி போல் தொடர்பு
அந்த பெண்ணின் வார்த்தையை நம்பிய ஆசிரியையை அவர் கேட்ட பணத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். அந்த பெண் கூறிய வங்கிக் கணக்கிற்கு தொடர்ந்து அவர் பணம் செலுத்தியிருக்கிறார். திடீரென சுங்கத்துறை அதிகாரியாக பேசி பெண்ணின் மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது, அந்த ஸ்காட்லாந்து நபரும் ஆசிரியையுடன் தொடர்பை துண்டித்துள்ளார்.

58 லட்ச ரூபாய் மோசடி
இதையடுத்து ஆசிரியை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். மொத்தமாக 58 லட்ச ரூபாய் பணத்தை அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு செலுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸாரிடம் ஆசிரியை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஐபி முகவரி மோசடி செய்த நபர்கள் குறித்து தேடும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
எந்த அறிவிப்புமின்றி பணம் பரிசாக வருகிறது. வேலை வாய்ப்பு கிடைக்கிறது என நம்பி பணம் செலுத்த வேண்டாம் விழிப்புணர்வோடு மக்கள் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications