வித விதமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து 685 சிம் கார்டுகள் வாங்கிய மோசடி நபர்.! சிக்கியது எப்படி?
தற்போது ஷாப்பிங் முதல் மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைன் மையமாகி விட்டது. குறிப்பாக மொபைல் போன் இருந்தாலே போதும் நாம் நினைத்து பொருட்களை வீட்டுக்கே எளிமையாக வரவைக்க முடியும். புதிய தொழில்நுட்ப வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
இருந்தபோதிலும் புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது முன்பு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துத்தான் திருடினார்கள். இப்போது மொபைல்போன் மூலமாகவே எளிமையாகக் கொள்ளையடிக்கின்றனர்.

இந்நிலையில் மும்பையில் 62 நபர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி 8500 சிம் கார்டுகள் வாங்கி கிரிமினல்கள் மற்றும் ஆன்லைன் கிரைம்களுக்கு விற்பனை செய்த 13 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதாவது சில கிரிமனல்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து சிம்கார்டுகள் வாங்கி அதைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக போலி ஆவணங்களைக் கொடுத்து சிம் கார்டுகளை வாங்குவதால், குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்படுகிறது.
அண்மையில் மும்பையில் கால் சென்டர் ஒன்று சட்டவிரோதமாக இயங்கிவந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். குறிப்பாக அங்கு இருக்கும் நபர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு வாங்குபவர்களுக்கு எதிராக மும்பை போலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் மும்பை மலபார் ஹில் போலீஸார் கோவண்டியை சேர்ந்த அப்துல் ஹகிம் என்பவரை கைதுசெய்தனர்.
இவர் வாடிக்கையாளர்கள் சிம் கார்டு வாங்க கொடுக்கும் ஆவணங்களில் தனது புகைப்படத்தை ஒட்டி சுமார் 680-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவர் தனது புகைப்படத்தில் லேசான மாற்றம் செய்தும், வித விதமான கோணங்களிலும் வேறு வேறு சட்டைகளிலும் போட்டோக்களை எடுத்து சிம் கார்டுகளை வாங்கியிருந்தார்.
இதேபோன்று நாலாசோபாரா பகுதியை சேர்ந்த விஷால் ஷிண்டே என்பவர் மற்றவர்களின் ஆதார் கார்டு, தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி சிம்கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்திருக்கிறார். இவர் இதுவரை 387 சிம்கார்டுகளை வாங்கி இதுபோல் ஆக்டிவேட் செய்து அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறார். இவர் தனியார் டெலிபோன் கம்பெனியில் சேல்ஸ்மெனாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் சத்ய நாராயணன் கூறியது என்னவென்றால், மும்பையின் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் போலி ஆவணங்கள், 62 பேரின் மாறுபட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி 8500 சிம் கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றர். இதில் ஒருவர் மட்டும் தனது சொந்த புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பயன்படுத்தி 650 சிம் கார்டுகளை வாங்கியிருக்கிறார்.
குறிப்பாக இது தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை எங்களுக்குக் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் 62 பேரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி 8500 சிம்கார்டுகள் பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் 2198 சிம் கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் கிரிமினல்கள், கால் சென்டர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார் கமிஷனர் சத்ய நாராயணன்.
photo courtesy: india today


Click it and Unblock the Notifications








