Jio நிறுவனத்தில் இருந்து பதவி விலகிய முகேஷ் அம்பானி! அடுத்த சேர்மேன் இவர் தான்!
65 வயது மிக்க தொழில் அதிபர் ஆன முகேஷ் அம்பானி (Mukesh Ambani), தனது குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பொறுப்பை தனது மூத்த மகன் ஆன ஆகாஷ் அம்பானியிடம் ஒப்படைத்தார்.

அதாவது ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய வாரியத் தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இன்றல்ல, முகேஷ் அம்பானி கடந்த ஜூன் 27 ஆம் தேதியே நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பிட்ட அதே தேதியில் நடைபெற்ற ஜியோவின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பங்கஜ் மோகன் பவார் நேற்று முதல் (ஜூன் 27, 2022) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளையும் வைத்திருக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து பணியாற்றுவார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய சேர்மேன் ஆக பொறுப்பேற்றுள்ள ஆகாஷ் அம்பானியை பொறுத்தவரை, இவர் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பட்டதாரி ஆவார். இவருக்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு உள்ளது.
30 வயதான ஆகாஷ் அம்பானி, ஜியோவின் 4ஜி சேவையை சுற்றியை டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவை மையமாக கொண்ட ஜியோஃபோனைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய பொறியாளர்கள் குழுவுடன் இவரும் பணியாற்றினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகலாக ஜியோ நிகழ்த்திய சில "கையகப்படுத்ததல்களுக்கு" ஆகாஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் தலைமை தாங்கினார், மேலும் AI-ML மற்றும் பிளாக்செயின் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஆகாஷ் அம்பானி தான் மூத்தவர். இவருக்கு இஷா அம்பானி என்கிற தங்கையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய சகோதரனும் உள்ளனர்.
ஆகாஷ் அம்பானி தான் ஏற்றுள்ள புதிய பொறுப்பின் கீழ், டேட்டா மற்றும் டெக்னாலஜியை அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று ஜியோ நிறுவனம் ஒரு அறிக்கையின் வழியாக தெரிவித்துள்ளது.
டிராய் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்று டெலிகாம் சந்தையின் முன்னணி இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications