கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்: அப்பறம் சகல சாப்பாடு எப்படி ஸ்விக்கியா, சொமாட்டோவா?
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி எந்தளவு வளர்ந்துள்ளது என்பதை வெளிகாட்டும் வகையில் மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூலிக்கப்பட்டது.

சுபநிகழ்ச்சியில் மொய் வசூல்
திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களில் மொய் வசூல் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக மதுரை, சிவகங்கை போன்ற தென் தமிழகத்தில் மொய் வசூல் பிரதானமாக இருக்கும். மொய் வசூல் என்பது அன்பளிப்பாகவே பார்க்கப்படுகிறது.

கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில் வாசலில் டேபிள் போட்டு மொய் வசூலிப்பதை பார்த்திருப்போம். இந்த நிலையில் மதுரையில் கூகுள் பே, போன்பே என்ற டிஜிட்டல் முறையில் மொய் வசூலிக்கும் முயற்சியில் புதுமண தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி
மதுரையை சேர்ந்த சரவணன் என்வருக்கும் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இந்த சுப நிகழ்ச்சியில் மொய் பணம் எழுதும் இடத்தில் கூகுள் பே, போன் பே முறையில் பணம் செலுத்தும் வகையில் க்யூஆர் கோடை பதிவிடப்பட்டிருந்து பத்திரிக்கையை வைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் மொய் வசூல்
திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் சிலர் மொய் தொகையை டிஜிட்டல் முறையில் அன்பளிப்பாக செலுத்தியதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடுவதை தடுக்கும் நடவடிக்கையாகவும், அலைச்சலை தவிர்க்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மணப்பெண் சிவசங்கரி விளக்கம்
இதுகுறித்து மணப்பெண் சிவசங்கரி கூறுகையில், நேரில் வந்து மொய் பணம் செலுத்த முடியாதவர்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த முடியும். இதன் மூலமாக யார் எவ்வளவு மொய் வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து மீண்டும் மொய் செலுத்த முடியும் என தெரிவித்தார்.

புதிய முயற்சிக்கு பாராட்டுகள்
இந்த பத்திரிக்கை சமூகவலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் மீம்கள் போட்டும் காமெடி வசனங்களில் கமெண்ட்கள் பதிவிட்டும் வருகின்றனர். இருப்பினும் மணமக்களின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
Pic Courtesy: Social Media


Click it and Unblock the Notifications