தமிழக ரேஷன் கடைகளில் வந்தது Mobile Muthamma திட்டம்.. இனி UPI போதும்.. எல்லாமே மாறுது.. இதோ முழு விவரம்!
இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது கூகுள் பே, போன்பே, பேஎடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் அதிக மக்கள் இந்த யுபிஐ வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ பணப் பரிவர்த்தனை மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் நடைமுறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மொபைல் முத்தம்மா (Mobile Muthamma) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2.26 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்காக 34,808 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயன்தரும் வகையில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக நியாய விலை கடைகள், குடும்ப அட்டைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன. தற்போது ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் தான் பயன்பாட்டில் உள்ளன. இதற்காக வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் கைரேகை பதிவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் அளவிற்குத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ரேஷன் பொருட்களுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக டிஜிட்டல் பேமண்ட் செலுத்தி விடலாம். அதாவது ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு இருக்கும் அதை உங்கள் மொபைல் போனில் உள்ள யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
தற்போது இந்தியா முழுவதும் சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்படுகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் மட்டும் யுபிஐ வசதி இல்லாமல் இருப்பது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி வந்தது. தற்போது இந்த குறையைப் போக்கும் வகையில் தான் மொபைல் முத்தம்மா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் பணம் நேரடியாக அரசின் வங்கி கணக்கிற்குச் சென்றுவிடும். எந்தவித முறைகேடுகள் நடக்காது.
அதேபோல் ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி கொண்டுவரப்பட்டதால் சில்லரை பிரச்சனை இருக்கவே இருக்காது. பின்பு இந்த மொபைல் முத்தம்மா திட்டம் முதலில் சென்னை உள்ள சில கடைகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் விரிவுபடுத்த தற்போது முடிவு செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா (Mobile Muthamma) திட்டம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மேலும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். பின்பு இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் இருக்கும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் எளிமையாகப் பணம் செலுத்திவிடலாம். பின்பு இந்த யுபிஐ சேவைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ரேஷன் கடைகளில் வந்துள்ள இந்த புதிய திட்டம் அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதுவும் இந்த திட்டம் மூலம் வேகமாக பணம் செலுத்த முடியும், சில்லரை பிரச்சனை இருக்காது என்பதால் அதிக மக்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications