புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
இந்த 2023 - 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் நேற்று கூடிய நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்று அனைத்து தரப்பினருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த பட்ஜெட் தான் ஆளுங்கட்சி சமர்ப்பிக்கும் இறுதி பட்ஜெட்டாகும்.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியான நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) அவர்கள், இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வெளியிட்டார். வருமான வரியில் மாற்றம், பசுமை திட்டங்கள், கல்வி நிறுவனங்களில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலவச தானியம் என்று பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தது.

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் எலெக்ட்ரோனிஸ் கேட்ஜெட்களின் விலை மலிவாகப் போகிறதா?
இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை மேம்படுத்தவும், தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும் புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அதில் மொபைல் போன் தயாரிப்பிற்குத் தேவையான கேமரா லென்ஸ்கள், லித்தியம் அயான் பேட்டரிகள் (Lithium ion Battery) மற்றும் இதர உதிரிப் பாகங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான கஸ்டம்ஸ் டியூட்டியில் (Customs Duty) தளர்வுகளை சீதாராமன் அறிவித்தார்.
இந்தியாவில் மொபைல் போன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த கஸ்டம்ஸ் ட்யூட்டி தளர்வுகளை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கஸ்டம்ஸ் டியூட்டி தளர்வுகள் மூலம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் சுய உற்பத்தியாளர்களுக்கு (Original Equipment Manufacturers, OEM), ஸ்மார்ட்போனில் 5ஜி தொழில்நுட்பத்தைச் சேர்த்து உருவாக்க உதவிக்கரமாக இருக்கும் என்று பட்ஜெட் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் நிறுவனங்களில் 5ஜி சேவையை உருவாக்க 100க்கும் மேற்பட்ட ஆய்வகங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேமரா லென்ஸ் மற்றும் லித்தியம் அயான் பேட்டரிகளுக்கான கஸ்டம்ஸ் டியூட்டி, இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கே தவிர, எவ்வளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன 'அந்த' ஒரு விஷயம்.!
கேமரா லென்ஸ், லித்தியம் அயான் பேட்டரிகளின் இறக்குமதி மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி பேனல்களின் இறக்குமதிக்கும் கஸ்டம்ஸ் டியூட்டியை 2.5% குறைத்துள்ளது. இந்த கஸ்டம்ஸ் டியூட்டி குறைப்பின் காரணமாக இந்தியாவில் டிவிக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த தளர்வுகள் இந்த நிதியாண்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்கள் இந்தியாவில் மலிவானவையாகும் என்று கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல தொழிலதிபர்கள் இதற்கான வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சியோமி நிறுவனத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணன், இந்த பட்ஜெட்டை பற்றி கூறும்போது, "இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கான பிரத்தியேக ஆராய்ச்சி, ஸ்மார்ட்போன் மற்றும் டிவிகளின் பாகத்திற்கான கஸ்டம்ஸ் டியூட்டியில் தளர்வு ஆகியவை இந்தியாவில் ஸ்மார்ட் எலக்ட்ரானிக்ஸ் (Smart electronics) உற்பத்தியை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, நோக்கியாவின் சார்பாக HMD குளோபலின் துணைத் தலைவர், சன்மீத் சிங் கோச்சர் இந்திய அரசின் இந்த கஸ்டம்ஸ் டியூட்டி தளர்வு இந்தத் துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள், இந்த பட்ஜெட்டை பற்றி தனது கருத்தைத் தெரிவிக்கும்போது,

அடேங்கப்பா.! இதற்காக தான் இப்படி ஒரு அறிவிப்பா?
"இந்தியா சமீப காலமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியில் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சுமார் 60,000 கோடிக்கு மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. கவுண்டர்பாயிண்ட் ரிசெர்ச் (Counterpoint Research) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன் சந்தை 10% வளர்ச்சியை கண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஸ்மார்ட்போன்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டனர். சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களே இதற்கு உதாரணம். இந்திய அரசும் புரொடக்சன் லிங்க்டு இன்சென்டிவ் (Production Linked Incentive) என்ற திட்டத்தை இம்மாதிரியான சுய உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைகள் தொடர்பான டேட்டாக்களை (Data) அவ்வப்போது இந்திய அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டும். புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமும், சீனாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தியாவையே தனது அடுத்த பெரிய உற்பத்தி நிலையமாக கருதுகின்றது என்று பல அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் மதிப்பு இந்த 2023-2024 நிதியாண்டில் 9 பில்லியன் டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications