டிவிஸ்ட்டு.. சீனா வயிற்றில் புளியை கரைப்பது Agni-5 ஏவுகணை அல்ல.. அதற்குள் இருக்கும் MIRV டெக்னாலஜி! ஏன்னா?
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் (Agni-5 Missile) முதல் விமான சோதனை (First Flight Test) ஆனது வெற்றிகரமாக முடிந்தது என்கிற தகவல் வெளியானதில் இருந்து "அமெரிக்கா பதறுது.. ரஷ்யாவுக்கு உதறுது.. சீனா சைலன்ட் ஆனது!" என்கிற தலைப்பில் பல செய்திகளை பார்க்க முடிகிறது.
உண்மை தான்! அக்னி-5 ஏவுகணையின் வெற்றியானது.. நம் நாட்டின் ஆயுத அமைப்பை பலப்படுத்தும்; பல எண்ணிக்கையிலான அணு ஆயுத தாக்குதல்களை சமாளிக்கும் (Tackle multiple nuclear warheads); நம் நாட்டின் மூலோபாய தடுப்பு திறனை (Strategic deterrence capability) வலுப்படுத்தும்.. என்பதில் சந்தேகேமே இல்லை!

ஆனால் சீனாவும், அமெரிக்காவும், ரஷ்யாவும் "அலெர்ட்" ஆவது வெறுமனே அக்னி-5 ஏவுகணையை பார்த்து மட்டுல்ல.. அதனுள் இருக்கும் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தையும் பார்த்துதான். எம்ஐஆர்வி டெக்னாலஜி என்றால் என்ன? எதிரி நாடுகளின் வயிற்றில் புளியை கரைக்கும் அளவிற்கு இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:
எம்ஐஆர்வி டெக்னாலஜி என்றால் என்ன? எம்ஐஆர்வி என்பது மல்டிபிள் இன்டிபென்டென்ட்லி டார்கெட்டபிள் ரீஎன்ட்ரி வெஹிக்கிள் (Multiple Independently Targetable Reentry Vehicle) என்பதன் சுருக்கமாகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒரே லான்ச்சில் வெவ்வேறு இடங்களில் உள்ள போர்க்கப்பல்களில் இருந்து எதிர்தாக்குதக்கலை நடத்த உதவும் தொழில்நுட்பமாகும்.

நேற்று வரையிலாக இந்த எம்ஐஆர்வி டெக்னாலஜி அடிப்படையிலான ஏவுகணை தாக்குதல்களை நடந்தும் திறன் ஆனது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இருந்தது. தற்போது அக்னி-5 ஏவுகணையின் வெற்றியின் வழியாக இந்த உயரடுக்கு பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும் (Pakistan) கூட எம்ஐஆர்வி திறன்களை மேம்படுத்துவதற்கான வேலையில் ஈடுப்பட்டு உள்ளதாகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாகிஸ்தான் அதன் எம்ஐஆர்வி திறன் கொண்ட ஏவுகணையான அபாபீலை (Ababeel) சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் அக்னி-5 வெப்பன் சிஸ்டத்தில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால்.. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்புகள் (Avionics systems) மற்றும் உயர் துல்லிய சென்சார் பேக்கேஜ்களையும் (High-accuracy sensor packages) கொண்டுள்ளது. இது ரீ-என்ட்ரி வெஹிகிள்ஸ் ஆனது விரும்பிய துல்லியத்தில், டார்கெட் பாயிண்ட்களை அடைந்ததை உறுதி செய்கிறது.
இந்த எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது 1960-களிலேயே தொடங்கி விட்டது. பாரம்பரியமான (அதாவது வழக்கமான) ஏவுகணைகளை போல் இல்லாமல்.. ஒரே ஏவுதலில் பல அணு ஆயுதங்களை சுமந்து சென்று, வெவ்வேறு இலக்குகளை சுயாதீனமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைக்காக தயார் ஆனதே இந்த எம்ஐஆர்வி தொழில்நுட்பம்!
அமெரிக்கா தான் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்திற்கான முன்னெடுப்புகளை செய்தது. 1970-ல் எம்ஐஆர்வி திறன் கொண்ட இன்டர் கான்டினென்டல் பாலிஸ்டிக் ஏவுகணையையும் (Intercontinental Ballistic Missile - ICBM), 1971-ல் எம்ஐஆர்வி திறன் கொண்ட நீர்மூழ்கி-கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணையையும் (Submarine-Launched Ballistic Missile - SLBM) அமெரிக்கா உருவாக்கியது.
மிஷன் திவ்யஸ்த்ராவின் (Mission Divyastra) கீழ் மேற்கொள்ளப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனையை, வெற்றிகரமாக நடத்தியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ( Defence Research and Development Organisation - DRDO) விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"மல்டிபிள் இன்டிபென்டென்ட்லி டார்கெட்டபிள் ரீஎன்ட்ரி வெஹிக்கிள் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் விமான சோதனையான மிஷன் திவ்யஸ்த்ராவானது, எங்கள் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பெருமை அளிக்கிறது" என்று இந்திய பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications








