இந்தியாவில் 100 கோடி அமெரிக்க டாலர் செலவில் மைக்ரோசாப்ட் வளாகம்.!!
உலகின் பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் பெங்களூரூவில் சுமார் 100 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் புதிய வளாகம் ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டிருக்கின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ பதிவியேற்று ஏழு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் சத்ய நாதெல்லா கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தனியார் இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு மிகவும் ரகசியமாக நடைபெற்றது. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கும் எவ்வித தகவல்களும் தெரியாதளவு ரகசியமாக நடைபெற்ற நிலையில் புதிய மைக்ரோசாப்ட் வளாகத்தில் மொத்தம் 5000 முதல் 7000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

தற்சமயம் ஹைத்ராபாத் நகரில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள், ஐடி மற்றும் சர்வதேச சேவை போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வளாகத்தில் கிட்டத்தட்ட 7000 பேர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் கர்நாடக அரசு தரப்பில் இருந்து இதுவரை புதிய வளாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைத்ராபாத் நகரில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகம் கட்டமைக்கப்படும் என அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications