நிறுத்தப்படும் லூமியா கருவிகள் : மைக்ரோசாப்ட் முடிவு உண்மை தானா.?
லூமியா பிரான்டு கருவிகளின் விற்பனையை அதிகரிக்க மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவி வருகின்றது. லூமியா பிரான்டினை வெற்றிப் பாதையில் கொண்டு வர மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு லூமியா 950 மற்றும் லூமியா 950 எக்ஸ்எல் போன்ற கருவிகளை வெளியிட்டது. அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கருவிகளும் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.

இதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகும் செய்தி குறிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா பிரான்டு கருவிகளை இந்த ஆண்டு இறுதியில் கைவிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக லூமியா பிரான்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வார இறுதி நாட்களில் லூமியா கருவிகளின் விலை குறைக்கப்படுவது இந்தச் செய்திகளை நம்ப வைக்கும் விதமாக அமைந்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஒன்று வாங்கினால் மற்றொரு கருவி இலவசம் என்ற முறையிலும் லூமியா கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. லூமியா கருவிகளின் வெளியீடு குறைந்துள்ளது. இறுதியாக லூமியா 650 விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்தக் கருவி இந்தியாவில் ரூ.15,299க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லூமியா கருவிகளுக்கு மூடுவிழா நடைபெறும் அதே வேலையில் அந்நிறுவனம் சர்ஃபேஸ் போன் கருவிகளை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது. மொத்தம் மூன்று சர்ஃபேஸ் போன் கருவிகள் வெவ்வேறு வாடிக்கையாளர்களைக் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் ஸ்மார்ட்போன் விரும்பிகள் என மூன்று வித பயனர்களை கவரும் வகையில் இருக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்ஃபேஸ் போன் கருவிகளில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் இந்தக் கருவிகள் 2017 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே கூறப்படுகின்றது. டிசம்பர் 2016க்குள் லூமியா கருவிகள் நிறுத்தப்படும் நிலையில் கூகுள் நிறுவனமும் கூகுள் போன் அல்லது பிக்செல் போன் கருவிகளை தயாரித்து வருவதாகச் செய்திகள் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








