கார்ப்பரேட் மூளைடா சாமி.. 21 ஆயிரம் பேரை நீக்கிய Meta நிறுவனத்துக்கு ரூ.46,597 கோடி லாபம்!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் (Microsoft), ட்விட்டர் (Twitter) , ஃபேஸ்புக் (Facebook ), அமேசான் (Amazon ) ஆகியவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஒரே நேரத்தில் அதிரடியாக பணி நீக்கம் செய்தது.
இந்த பணிநீக்க நடவடிக்கைகளில் அதிகபட்சமான ஊழியர்கள் தங்களது வேலையை இழந்தது, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ( WhatsApp ) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆப்ஸ்களின் தாய் நிறுவனமான மெட்டாவில் ( Meta ) தான். இந்தாண்டு பிப்ரவரி மாதம் 10,000 பேரை பணிநீக்கம் செய்து இருந்தது மெட்டா. அதேபோல 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,000 பேரை பணிநீக்கம் செய்தது.

இந்த எண்ணிக்கை மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாகும். மென்பொருள், கிராபிக்ஸ், அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தங்களது நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற பணிநீக்க நடவடிக்கைகள் மெட்டா நிறுவன ஊழியர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்ஸ்களில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இவ்வளவு பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கினால், மெட்டா நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படாத என்று கூட நமக்கு தோன்றலாம்.
ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்களின் மூளையே லாபத்தில்தான் இயங்கும் என்பதற்கு மெட்டாவின் பணிநீக்க நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறது. ஆம், 21,000 பேரை பணிநீக்கம் நீக்கம் செய்த பிறகு மெட்டா நிறுவனத்துக்கு ரூ.46,597 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. இந்த லாபம் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே கிடைத்துள்ளதான் மிகுந்த ஆச்சர்யம்.
இது 2022ஆம் ஆண்டின் நான்கு காலாண்டுகள் உடன் ஒப்பிடுகையில் 22.7 சதவீதம் அதிகமாகும். அதேபோல மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Meta CEO Mark Zuckerberg) நிகர மதிப்பும் (Net worth) ரூ.81,750 கோடியாக அதிகரித்துள்ளது. மெட்டா நிறுவத்தின் பங்குகள் 14 சதவீதம் அதிகரித்ததற்கு பின்பு இந்த நிகர லாபம் உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மார்க் ஜுக்கர்பெர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்துக்கு முன்னேறியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் (Bloomberg Billionaires Index) குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 87.3 பில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் ரூ.7,11,225 கோடி). மெட்டாவின் பங்குகள் கடந்தாண்டு 26 சதவிகிதம் சரிந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
இதன் மூலம் மார்க் ஜுக்கர்பெர்க், தனது பணிநீக்க முடிவானது, நிறுவனத்தின் லாபத்தை நோக்கியது என்பதை நிரூப்பித்துக் காட்டியுள்ளார். இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து வேறு பல தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணிநீக்க நடவடிக்கைகள் தொடரலாம். பெரும் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே பார்க்கும் என்பதே உண்மை. அதை குறைக்கூறவும் முடியாது.


Click it and Unblock the Notifications