எதுக்கு? செல்போனுக்காக போலி விமான டிக்கெட்! மும்பையில் சிக்கிய ஜேம்ஸ் பாண்ட்!
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை ஏர்போர்ட்டில் (Mumbai Airport) போலி விமான டிக்கெட் (Fake Flight Ticket) உடன் நுழைந்த ஒருவரை கண்டு சகப் பயணிகள் தெறித்து ஓடிய நிலையில், போலீசாரிடம் மாட்டிய அவர் விநோத வாக்குமூலம் அளித்துள்ளார். அதைக்கேட்டு போலீசாரே தலையில் கையில் வைத்துவிட்டனர்.
அப்படி மும்பை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்க தொடங்விட்டன. அதாவது, திரைப்படங்களில் வரும் ஹீரோக்கள், போலி விமான டிக்கெட்டுடன் வெளிநாடு செல்வது, மாறுவேஷம் போட்டுக்கொண்டு வில்லன்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகளில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

அந்த நேரத்தில் கைத்தட்டி விட்டு அடுத்த வேலையை நாம் பார்க்க தொடங்கி விடுவோம். ஆனால், சிலர் அதுபோன்று நிஜ வாழ்க்கையில் செய்து மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவருகிறது. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (Chhatrapati Shivaji Maharaj International Airport) நடந்துள்ளது.
மும்பையின் அந்தேரியை சேர்ந்த நூர் ஆலம் முகமது கய்யும் ஷேக் என்பவர் விஸ்தாரா ஏர்லைன்ஸ் (Vistara Airlines) விமான டிக்கெட் உடன் மும்பையில் இருந்து டெல்லி செல்வதற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். அப்போது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஊழியர்கள், அவரது டிக்கெட்டை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அது போலியான விமான டிக்கெட் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால், ஏர்லைன்ஸ் ஊழியர்கள், சிஐஎஸ்எஃப் (CISF) அதிகாரிகளை கூப்பிட்டுள்ளனர். இதனிடையே அவர் தப்பிக்க முயன்றாத கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த சக விமான பயணிகள் தெறித்து ஓடியுள்ளனர். இருப்பினும், நூர் ஆலம் முகமது கய்யும் ஷேக்கை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து விட்டனர். இதையடுத்து, அவர் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில், நூர் ஆலம் முகமது கய்யும் ஷேக், கடந்த வாரம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்துள்ளார். அப்போது மும்பை விமான நிலையத்தில் அவரது செல்போன் தொலைந்துள்ளது. இந்த போன் தொலைந்தது அவருக்கு வீட்டிற்கு சென்ற பின்பே தெரியவந்துள்ளது. ஆகவே, மீண்டும் விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என்பதால், டெல்லியில் இருந்து மும்பைக்கு வர பயன்படுத்தப்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் டிக்கெட்டை வைத்து போலியாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படியே அந்த டிக்கெட்டில் தேதியையும், டெல்லி-மும்பை என்பதை மும்பை-டெல்லி என்றும் தனது லேப்டாப்பை பயன்படுத்தி மாற்றியுள்ளார். இதைவைத்து மும்பை விமான நிலையத்துக்குள் நுழைந்து, அதன்பின் அங்குள்ள சிசிடிவி கேமரா அறையை கண்டுபிடித்து, அங்கு சென்று தனது செல்போன் எங்கு தவறியது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருந்தது.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், நூர் ஆலம் முகமது கய்யும் ஷேக்கின், இந்த வாக்குமூலம் போலீசாரால் நம்பும்படி இருக்கவில்லை. ஆகவே, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படி அத்துமீறி விமானநிலையத்துக்குள் நுழைந்ததற்காக அவருக்கு 7 ஆண்டுகள் வரையில் வெளியே வர முடியாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








