நிறைவேறும் மத்திய அரசின் ஸ்கெட்ச்..Apple எடுக்கும் அதிரடி முடிவு!
2025 ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலான இந்திய அரசின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சி..
இதுகுறித்து வெளியான தகவலை பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க இருக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் அதன் ஒட்டுமொத்த உற்பத்தி திறனை 25 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் அதன் ஐபோன் 14 இன் மொத்த உற்பத்தியில் 5 சதவீதத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கத் திட்டம்
ஆய்வாளர் ஜேபி மோர்கன், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் 15 இன் தயாரிப்பு விவரங்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.
அதில் இந்த ஆண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் சீனாவில் அதன் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் அதேநேரத்தில் சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதே நிலை தொடரும் எனில் இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் உற்பத்தி நிலையங்களில் தான் ஐபோன் 15 மாடல்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபோன் உற்பத்தி ஒதுக்கீடுகள் அதிகரிக்க வாய்ப்பு
மேலும் இதுகுறித்து ஜேபி மோர்கன் கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடல்களை 2022 இன் நான்காம் காலாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் அதிக ஐபோன் உற்பத்தி ஒதுக்கீடுகளை நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

85 சதவீதமாக உயரும் என கணிப்பு
சந்தை நுண்ணறிவு நிறுவனமான சைபர் மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) வெளியிட்ட தகவலில், ஐபோன்களின் இறக்குமதி 2019 ஆம் ஆண்டில் 50 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 15 சதவீதமாக குறையும் என குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிளின் உள்நாட்டு உற்பத்தி 85 சதவீதமாக உயரும் என கணிக்கப்படுவதே இறக்குமதி குறையும் என மதிப்பிடுவதற்கு காரணம் ஆகும்.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 7 மில்லியன் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுவே இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி தொடங்கும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டில் சுமார் 12 மில்லியன் ஐபோன்கள் உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை ஆப்பிள் எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக சிஎம்ஆர் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு அதிகரிக்கக் காரணம்..
முன்னதாக ஆப்பில் நிறுவனம் சீனாவில் பெரும்பாலான ஐபோன்களை தயாரித்திருக்கிறது. ஆப்பிள் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும்.
சமீபகாலமாக அமெரிக்காவும் சீனாவும் பொருளாதார ரீதியிலான மோதல்களை மேற்கொண்டு வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரும் என்பதை யூகித்த ஆப்பிள் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளது. அதுதான் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது.

இந்தியாவை தேர்ந்தெடுக்க காரணம்..
இந்தியாவை தேர்ந்தெடுக்க காரணம், மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சலுகைகளையும் வழங்குகிறது.ஆப்பிள் இந்தியாவை தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம்.
மேலும் உலகளவில் இரண்டாவது அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யும்பட்சத்தில் சந்தை வரவேற்பும் அதிகமாக இருக்கும் என்பது உறுதியான விஷயம். இந்தியாவை ஆப்பிள் தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான்
ஆப்பிள் நிறுவனம் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிப்பை மேற்கொள்கின்றன.
இந்தியாவில் விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
உலகளாவிய உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது, போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்குவது மற்றும் உள்நாட்டு தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்தல் போன்ற பிஎல்ஐ திட்டத்தின் கீழ், அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஆப்பிள் அதன் முதலாண்டு செயல்திறனிலேயே அடைந்துள்ளது என ஆய்வாளர்கள் முன்னதாகவே குறிப்பிட்டனர் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications