Madurai jallikattu: அட்டகாச அறிவிப்பு: மொபைலில் லைவ் ஆக உலக புகழ் மதுரை ஜல்லிக்கட்டு- எப்படி ?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டி முன்னேற்பாடுகள் தீவிரம்
கடந்த சில நாட்களாகவே அலங்காநல்லூர், பாலமேட்டில் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் விழா குழுவினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏற்பாடுகள் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் பங்கேற்கும் காளைகள்
அதேபோல், அலங்காநல்லூர், பாலமேட்டில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று காளைகளுக்கான பதிவு நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் 700 காளைகளும், பாலமேட்டில் 650 காளைகளும் அனுமதிக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

30-க்கு மேற்பட்ட மருத்துவ குழுவினர்
இதையடுத்து, இன்று அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசினர் பெண்கள் பள்ளியில் காளைகளுக்கான பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகள் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் உடற் தகுதி குறித்து ஆய்வு செய்தனர். காளைகளின் உயரம், வயது, கொம்பின் தன்மை, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது.

ஏராளமான காளை உரிமையாளர்கள் முன்பதிவு
அதன்பின், காளைகளின் உரிமையாளர்களின் ரேசன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு காளைகளுக்கான பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடந்த காளைகள் பதிவில் மதுரை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் களைகளுடன் வந்துள்ளனர்

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
இதே போல், அவனியாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்றது. 18 வயது நிரம்பியவர்கள் முதல் திரளானோர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அங்குள்ள வாடிவாசல் முன்பு இன்று நடந்து முடிந்தது.

ஜல்லிக்கட்டு நேரலை
இந்த நிலையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை மதுரை காவலன் செயலியில் வழங்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை காவலன் செயலி
குறிப்பாக மதுரை காவலன் செயலியானது மதுரை மாநகரில் மட்டும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறை மற்றும் பொது மக்களின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மதுரை காவலன் செயலியானது காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொடர் நேரலையாக ஒளிபரப்பத் திட்டம்
இந்த நிலையில் அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டு திருவிழா நிகழ்ச்சிகள் தொடர் நேரலையாக மதுரை காவல்துறையில் வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். வருகிற 15-ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நேரடியாகவும் 16ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களிடம் வரவேற்பு
இதனை தொடர்ந்து உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் மதுரைகாவலன் செயலியில் ஜல்லிக்கட்டு முடியும் வரை தொடர்ச்சியாக நேரடியாக வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications