அக்டோபர் 1 முதல் LPG-க்கு புது ரூல்ஸ்.. சிலிண்டர் மானியம்.. இந்த வேலையை உடனே முடிங்க.. ஏன்?
மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் பெறுபவர்கள் அதைத் தொடர்ந்து பெறுவதற்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்குள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளாதவர்களுக்கு மானிய சலுகை தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
தற்போது இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோக எல்ஜிபி நுகர்வோர் மானியத்துடன் சில்லறை விற்பனை விலையில் எல்பிஜி சிலிண்டரை பெறுவதற்கு அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு (BAA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர், உண்மையான மற்றும் தகுதியான குடும்பங்களைச் சென்றடைவதை உறுதி செய்வதையும், வணிக மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கு திசைதிருப்பப்படுவதையும் தடுப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரில் 27.43 கோடி பேர், அதாவது 89.9 சதவீதம் பேர், ஏற்கனவே பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர். எனவே, இவர்களுக்கு இனி எந்தவிதமான நடவடிக்கையும் தேவையில்லை என்றும், வழக்கம்போல் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆதார் சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு கேஸ் மானியம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனாலும் வழக்கம் போல சிலிண்டர் கிடைக்கும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் டெலிவரி செய்யும் போதோ, கேஸ் ஏஜென்சி அலுவலகத்திலோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் ஆப் மூலமாகவோ இதை செய்து கொள்ளலாம். இதற்கான காலக்கெடு ஏற்கனவே நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு எண்ணெய் நிறுவனமும் தனித்தனி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 'IndianOil ONE' செயலியையும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 'HelloBPCL' செயலியையும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் 'HP PAY' செயலியையும் பயன்படுத்தி பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை எளிதாக முடித்துக்கொள்ளலாம்.
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பாத அல்லது அதனை செய்ய இயலாத வாடிக்கையாளர்களும் தொடர்ந்து எல்பிஜி சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும், தங்களது விருப்பத்தை இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்அப் சாட்பாட் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு இருப்பு நிலையைப் பொறுத்து 5 கிலோ அல்லது 10 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்கள் மானியமின்றி சந்தை விலையில் வழங்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டுமே எல்பிஜி மானியம் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போலியான எல்பிஜி இணைப்புகளை கண்டறிவதுடன், மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நோக்கங்களுக்காக முறைகேடாக பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான நுகர்வோருக்கு எல்பிஜி சிலிண்டர் கிடைப்பதைத் தடுப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம் அல்ல என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் சரிபார்ப்பை எளிதாக நிறைவு செய்வதற்காக பல்வேறு வழிமுறைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
