ஓஹோ விஷயம் அப்படி போகுதோ.. Elon Musk தனது Twitter CEO பதவியை தாரை வார்த்து கொடுக்க இதுதான் காரணமா!
சலசலப்புகள் இல்லாமல் எலான் மஸ்க் (Elon Musk) எதையுமே செய்ய மாட்டார் போல.. பெரும் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய ஆறு மாதங்களுக்கு பிறகு, எலான் மஸ்க் தனது ட்விட்டர் சிஇஓ (Twitter CEO) பதவியை பெண்மணி ஒருவருக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளார்.
என்பிசியுனிவர்சல் (NBCUniversal) நிறுவனத்தின் முன்னாள் விளம்பரத் தலைவரான லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino) ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைக்கு நிர்வாகியாக (Twitter New CEO) எலான் மஸ்க்கால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் லிண்டா அடுத்த ஆறு வாரங்களில் தனது வேலைகளை தொடங்குவார் என்றும் எலான் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் தன் பதவியை தாரை வார்த்து கொடுக்க என்ன காரணம்? ட்விட்டரில் எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டு இருக்கிறது.. ப்ளூ டிக்களுக்கு சந்தா கட்டணம், லாங் ட்வீட் உட்பட எக்கச்சக்கமான புதிய அம்சங்கள் என எலான் மஸ்க் நன்றாகத்தானே பணியாற்றி கொண்டிருந்தார். திடீரென அவர் தன் பதவியை லிண்டா யாக்கரினோவுக்கு தாரை வார்த்துக்கொடுக்க என்ன காரணம்?
உண்மைதான் ட்விட்டர் நிறுவனம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்கள் பரிதாபமான நிலைக்கு போய்விட்டது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலான் மஸ்க்கால் வேறு எதிலுமே பெரிதாக கவனம் செலுத்த முடியவில்லை.
மின்சார வாகனங்களுக்கான (electric vehicles) தேவை குறைவதால் போராடி வரும் டெஸ்லா நிறுவனத்தின் அதிக எலான் மஸ்க்கால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. சமீபத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship Rocket) ஆனது விண்ணில் செலுத்தப்பட்டபோது வெடித்து சிதறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக எலான் மஸ்க் கவனச்சிதறலில் சிக்கி தவிக்கிறார் என்பது போல் தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிதான் என்பதும் வெளிப்படை. அதனாலேயே தான் எலான் மஸ்க், லிண்டா யாக்கரினோவை புதிய சிஇஓ-வாக நியமித்து உள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது.
இனிமேல் எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரில் எந்த வேலையும் இல்லையா? அப்படியெல்லாம் கிடையாது. புதிய தலைமை நிர்வாக அதிகாரியை கண்டுபிடித்து விட்டதாக கூறிய கையோடு இனிமேல் நான் ட்விட்டரில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (Chief technology officer) செயல்படுவேன் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த முடிவு, டெஸ்லாவில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு (Tesla investors) ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ட்விட்டர் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் அதிக நேரத்தை செலவிட்டாலும் கூட அவர் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நியூராலிங்க் போன்ற பல வணிகங்களை நிர்வகிக்கவும் தவறவில்லை.
ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் கூகுள் (Google) நிறுவனத்தின் பார்ட் (Bard) போன்ற ஏஐடூல்களை காலி செய்வதற்காக ட்ரூத்ஜிபிடி (TruthGPT) என்கிற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தை (AI Company) எலான் மஸ்க் உருவாக்கி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








