டெபாசிட் பணம் பாதுகாப்பா இருக்கு., யாரும் அச்சப்பட வேண்டாம்: ரிசர்வ் வங்கி!
லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி
நாட்டின் பல இடங்களில் 566 வங்கிக் கிளைகளையும் 918 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது லட்சுமி விலாஸ் வங்கி. மிகப்பெரிய லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. சிறுகுறு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி பெரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்னையில் லட்சுமி விலாஸ் வங்கி சிக்கியுள்ளது.

கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கிய லட்சுமி விலாஸ் வங்கி
கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கிய லட்சுமி விலாஸ் வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாராக்கடன் பிரச்னையுடன் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது. இதன்காரணமாக வங்கி சீரமைப்பு திட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கி மத்திய ரிசர்வ் வங்கி கீழ் கொண்டுவரப்பட்டது.

மத்திய ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடு
மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை லட்சுமி விலாஸ் வங்கி இனி யாருக்கும் வழங்க முடியாது. அதேபோல் பெரிய டெபாசிட் தொகையை ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் பெறவும் முடியாது. அதுமட்டுமின்றி டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.

மொரட்டோரியத்தின் கீழ் வங்கி
வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கி மொரட்டோரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன்காரணமாக வங்கி இருப்புத் தொகையில் இருந்து ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும். மேலும் மருத்துவ செலவு, கல்வி செலவு, திருமணச்செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் எடுக்க வேண்டுமென்றால் ரிசர்வ் வங்கி அனுமதி பெற வேண்டும்.

யாரும் அச்சப்பட தேவையில்லை
இதன்காரணமாக லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அச்சம் அடைந்தனர். இதையடுத்து டி.என்.மனோகரன் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கி நியமித்தது. டெபாசிட் செய்தவர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் டெபாசிட் செய்தவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
source: indianexpress.com


Click it and Unblock the Notifications