அப்படி போடு.. ரூ.600 செலவில் கொல்கத்தா டூ சென்னை.. 3 மணி நேரம் போதும்.. ஆனந்த் மஹிந்திரா பரபரப்பு ட்வீட்..
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதோடு துடிப்பான இளைஞர்கள், திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதிலும் இவர் வல்லவர் ஆவார். இந்நிலையில் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சென்னையில் இருந்து கொல்கத்தா (Kolkata to Chennai) வரை ரூ.600 செலவில் 3 மணிநேரத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் பறக்கும் படகு வடிவமைப்புக்கு தற்போது ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். அதாவது சிலருக்கு இது வெறும் கற்பனையாக தோன்றலாம். ஆனால் இது விரைவில் நிஜமாகவுள்ளது.

அதாவது ஐஐடி மெட்ராஸின் உதவியுடன், வாட்டர் ஃபிளை டெக்னாலஜி (Waterfly Technologies) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், சமீபத்தில் கடலில் பறக்கும் வகையிலான ஒரு அதிநவீன படகு ஒன்றை வடிவமைத்து அறிமுகம் செய்தது. இந்த பறக்கும் படகுக்கு electric seagliders என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும் ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதைப் பொறுத்தவரை, Silicon Valley போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பு அனைத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டது என்னவென்றால், ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சி பற்றி செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதில் எனக்கு பிடித்தது நமது பரந்த நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்கான வாக்குறுதி மட்டுமல்ல, இந்த வாகனத்தின் வடிவமைப்பு மிகவும் அற்புதமானது என்பது தான்.
அதேபோல் இது குறித்து வாட்டர் ஃபளை டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான ஹரிஷ் ராஜேஷ் தெரிவித்தது என்னவென்றால், மின்சார seagliders-ளைப் பயன்படுத்தி இந்தப் பயணத்தை மலிவாகவும் வேகமாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். பின்பு இது தண்ணீரில் இருந்து புறப்பட்டு நான்கு மீட்டர் உயரத்தில் பறப்பது போன்ற காற்றின் மேல் பறக்கும் Wing-in-Ground (WIG) படகாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The New Indian Express வெளியிட்ட தகவலின்படி, கொல்கத்தாவிலிருந்து சென்னை வரை வெறும் ரூ. 600 ரூபாயில் 1,600 கிமீ பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஹரிஷ் ராஜேஷ் கூறியிருந்தார். பின்பு இந்த விலை ஆனது AC மூன்றாம் வகை ரயில் டிக்கெட்டைவிட குறைந்த விலை ஆகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேசமயம் இந்த திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. ஏரோ இந்தியாவில், நிறுவனம் அதன் வடிவமைப்பை மட்டுமே வழங்கி உள்ளது. பின்பு 100 கிலோ எடையுள்ள முதல் மாதிரி, அடுத்த சில மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு டன் முன்மாதிரி பறக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் இந்த 2025-ம் ஆண்டின் முடிவுக்குள் ஒரு டன் எடையுள்ள மாதிரி பறப்பதற்குத் தயாராக இருக்கும்.
வரும் 2026-ம் ஆண்டுக்குள் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்குப் பயணிக்கக்கூடிய 20 இருக்கைகள் கொண்ட மாதிரியை உருவாக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் நிதி உதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிறுவனம் இப்போது பாதுகாப்புத் துறையில் இருந்து மேலும் நிதி திரட்ட முயல்கிறது. வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications