கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா! பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது, இந்தியாவில் ஊடுருவிய கொரோனா ஊரடங்கிற்குப் பின்னரும் குறைந்ததாகத் தெரியவில்லை, கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கான மாற்றுமருந்து என்ன என்று உலக நாடுகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் நிலையில் கேரள அரசு புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது என்று அறிவித்துள்ளது.

பிளாஸ்மா தெரபி பயன்படுத்த கேரள அரசு முடிவு
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, பிளாஸ்மா தெரபியை பயன்படுத்தப் போவதாகக் கேரள அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை சுமார் 6,825-க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 230-ஐ தொட்டுள்ளது வேதனையளிக்கிறது. இன்னும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சோகம்.

புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ள கேரளா
உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறது. இந்த வரிசையில் இந்தியாவும் தனது முயற்சியை மும்முரமாகச் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் மாநிலமான கேரளா ஒரு புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதாவது கேரளா அரசும், கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

20 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ள கேரளா அரசு
கேரளாவில் இதுவரை சுமார் 357 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அம்மாநில அரசு சுமார் 20 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் பிளாஸ்மா தெரபியின் மூலம், கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கக் கேரளா அரசும் தற்பொழுது முன்வந்துள்ளது.

பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவிற்கு மருந்து உள்ளதா?
கொரோனா வைரஸிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க இப்பொழுது பயன்படுத்தப்படும் முறை தான் பிளாஸ்மா தெரபி முறை, பிளாஸ்மா தெரபி என்றால் என்ன என்று முதலில் நாம் தெரிந்துகொள்ளலாம். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு எதிரணுக்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பிரித்தெடுத்து, நோய் பாதிப்பில் இருப்பவருக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி எனப்படுகிறது.

பிளாஸ்மா தெரபியின் படி பின்பற்றப்படும் பல்வேறு வழிமுறைகள்
பிளாஸ்மா தெரபியின் படி குணமடைந்தவர்களின் உடலிலிருந்து நோய் எதிர்ப்பனுக்களை பிரித்தெடுப்பதில் பல்வேறு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவருக்கு, இரு முறை மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பின்னர், எலிசா சோதனை நடத்தப்பட்டு, அதற்குப்பின், அவரது ரத்தம் தூய்மையானதா இருக்கிறதா என்பதை உறுதி செய்ய பிறகே ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல்
இந்த முறையைப் பின்பற்றிக் குணமடைந்தவர்களின் எதிர்ப்புச் சக்தி அணுக்களைச் செயற்கையாக உருவாக்கி அதை வைத்துப் பாதிக்கப்பட்டவர்களைக் குணமடையச் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பெரிதும் நம்புகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கேரள அரசின் இந்த முயற்சி கைகொடுத்தால் புதிய நம்பிக்கை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.கேரள அரசின் இந்த முடிவுக்கு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications