Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?
கேரளாவை சேர்ந்த ஒருவர், பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவை (Zomato) நீதி மன்றம் வரை இழுத்து கதற வைத்துள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது!
அதென்ன சம்பவம்? நீதிமன்றம் வரை செல்லும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? யார் அந்த கேரளா சேட்டன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்

சோமேட்டோ ஆப் வழியாக 2 ஆர்டர்கள்!
அருண் ஜி கிருஷ்ணன் - கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் ஒரு மாணவர் ஆவார்.
இவர் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் ஆன Zomato வழியாக இரண்டு ஆர்டர்களை செய்துள்ளார். ஆனால் அந்த இரண்டு ஆர்டர்களுமே அவருக்கு டெலிவரி செய்யப்படவில்லை மற்றும் அந்த இரண்டு ஆர்டருக்கான பணத்தையும் கூட Zomato திருப்பி தரவில்லை!

கடுப்பானார் கிருஷ்ணன்!
அருண் ஜி கிருஷ்னன் டெல்லியில் இருந்தபோது, சோமேட்டோ ஆப் வழியாக உணவை ஆர்டர் செய்த போதும் கூட இதே சிக்கலை எதிர் கொண்டிருந்தார் போல, ஆகையால் அவர் சோமேட்டோவின் மோசமான சேவையால் எரிச்சல் அடைந்துள்ளார்.
ஆகையால், அவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி உள்ளார். அங்கே Zomato நிறுவனம் குறிப்பிட்ட உணவு விநியோகம் தோல்வியடைந்ததற்கு இரண்டு காரணங்களை முன்வைத்தது!

அதென்ன காரணங்கள்?
முதல் காரணம் - கொடுக்கப்பட்ட முகவரியில் உணவை சேகரிக்க யாரும் இல்லை. இரண்டாவது காரணம் - அந்த முகவரியில் சில சிக்கல்கள் இருந்தன, அதனால் உணவை ஆர்டர் செய்த ஆப் வழியாக அதை திருத்துமாறு பயனருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் சோமேட்டோவின் எந்த காரணங்களையும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை!

கொடுத்த காசை வட்டியோடு திரும்பி வாங்கிய கேரளா சேட்டன்!
சோமேட்டோவின் காரணங்களை ஏற்றுக்கொள்ளாத மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையமானது, குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு ரூ.362 என்கிற தொகையை திருப்பி தருவதோடு சேர்த்து, ரூ.8000 என்கிற இழப்பீடும் கொடுக்கும்படி உதிரவிட்டுள்ளது
அதாவது, புகார்தாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5000 இழப்பீடு வழங்கவும், வழக்குச் செலவுக்காக ரூ.3,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது!

வெஜ் பிரியாணி மெசேஜ் அனுப்பிய சோமேட்டோ!
சோமேட்டோ நிறுவனம் தொடர்பான மற்றொரு செய்தியை பொறுத்தவரை - கடந்த நவம்பர் 15 ஆம் தேதியன்று, சோமேட்டோ அனுப்பிய "வெஜ் பிரியாணி" தொடர்பான மெசேஜ் ஒன்று பேசுபொருளானது!
கடந்த நவம்பர் 15 அன்று, உலக மக்கள் தொகை ஆனது 8 பில்லியனை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து இருந்தது. அதே நாளில் - உலக மக்கள்தொகை 8 பில்லியனாக உயர்ந்தாலும் கூட, வெஜ் பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று சோமேட்டோ மெசேஜ் அனுப்பி இருந்தது!


Click it and Unblock the Notifications