கீழடி: 2000 ஆண்டுக்கு முன்னர் கட்டுமானத்திற்காக பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிப்பு!
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணியில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வட்ட வடிவ துளைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது. இந்த 6ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்.19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இடையில் ஊரடங்கின் போது அகழாய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பனியின் போது பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, நீள வடிவ பச்சை நிறப் பாசிகள், விலங்கின் எலும்பு படிமம், மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள், மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், சிறிய உலைகலன், ஓடுகள், எடைக் கற்கள் எனப் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கீழடி பகுதியில் வளைவான செங்கல் கட்டுமான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அருகிலேயே 6 அடி ஆழத்தில் வளைவான அமைப்பில் இருக்கக்கூடிய 6 சிறிய வட்ட வடிவ துளைகள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலும் வட்ட வடிவ வசிப்பிடத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மூங்கில் கழிகள், மரக்குச்சிகளை வட்ட வடிவில் நட்டு அதன் மேல், கூரை எழுப்பி அதில் குடியிருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரமாக 5ம் கட்ட அகழாய்வு பனியின் போது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கூரை அமைப்பைக் கண்டறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடிவடையும் என்பதால், தற்பொழுது கீழடியில் அகழாய்வு பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளது. 6-ம் கட்ட அகழாய்வின் போது கீழடியில் மொத்தமாக 12 குழிகள் தோண்டப்பட்டது, தற்பொழுது இன்னும் கூடுதலாகக் குழிகளில் தோண்டப்படுவதற்கான நில அளவுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது என்று தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications