2000 ஆண்டுக்கு முன்பே இதை செய்த தமிழர்கள்: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் சிக்கிய நற்செய்தி.!
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணியில் சமீபத்தில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து தற்பொழுது 5 அடுக்கு உரை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது. இந்த 6ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்.19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இடையில் ஊரடங்கின் போது அகழாய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பனியின் போது பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, நீள வடிவ பச்சை நிறப் பாசிகள், விலங்கின் எலும்பு படிமம், மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள், மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், சிறிய உலைகலன், ஓடுகள், எடைக் கற்கள் எனப் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பனியின் போது இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தமிழர்களால் கீழடி அதிகம் பேசப்பட்டு வருகிறது, கீழடியின் சிறப்பை உணர்ந்த தமிழக அரசு தற்பொழுது கூடுதல் கவனத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில், உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.21 கோடி செலவில் கட்டிட வேலைகள் மும்முரமாகத் துவக்கியுள்ளது.

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் தற்பொழுது தற்காலிகமாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கீழடியின் 6-ம் கட்ட அகழாய்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தற்பொழுது புதிதாக 5 அடுக்கு கொண்ட உறைக் கிணறு கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் கூடுதல் அடுக்குகள் நிலத்திற்கு அடியில் புதைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள் அந்த பகுதியை முழுமையாகத் தோண்டும் பணியில் இறங்கியுள்ளனர்.

தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த உறைக் கிணறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக் கூடும் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியின் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்பொழுது பணிகள் இன்னும் வேகமாக முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications