கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்ட 51/2 அடி முழு உருவ மனித எலும்புக்கூடு! அவிழும் மர்மம்!
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணியில் சமீபத்தில் 5 அடுக்கு உரை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொந்தகையில் நேற்று மாலை 51/2அடி அளவில் உள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது. இந்த 6ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்.19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இடையில் ஊரடங்கின் போது அகழாய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பனியின் போது பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, நீள வடிவ பச்சை நிறப் பாசிகள், விலங்கின் எலும்பு படிமம், குழந்தைகளின் எலும்புக் கூடுகள், மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், சிறிய உலைகலன், ஓடுகள், உரை கிணறு, எடைக் கற்கள் எனப் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது முதல் முறையாக முழு உருவ மனித எலும்பு கூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாத துவக்கத்தில் 7ம் தேதி அன்று ஒரு எலும்புக்கூடும், அதனைத் தொடர்ந்து 13ம் தேதி அன்று மற்றொரு குழந்தையின் எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோல், கடந்த மாதம் ஜீன் 19ம் தேதியும் ஒரு எலும்புக் கூடும் கண்டெடுக்கப்பட்டது.

இதுவரை ஒட்டுமொத்தமாக 5 முழு உருவக் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக 51/2அடி அளவில் முழு உருவ எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதை ஆராய்ச்சி செய்து இன்னும் கூடுதல் தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழ்வாய்வில் பல மர்ம முடிச்சுகள் வேகமாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.

நேற்று அகழாய்வில் அதிரடி திருப்பமாக கொந்தகையில் இந்த முழு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சிதிலம் அடையாமல் அப்படியே இருக்கிறது, முழு மனித உடல் எலும்புக்கூடு அப்படியே கிடைப்பது இதுதான் முதல்முறையாகும். அடுத்தகட்டமாக கார்பன் ஆராய்ச்சி செய்யப்படவுள்ளது, இதன் மூலம் படிமத்தின் வயது மற்றும் காலத்தைக் கணக்கிட முடியும் என்று மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

இந்த முழு உருவ எலும்பு கூடுகளை தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து கண்டெடுத்துள்ளனர். மேலும் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்று வருகிறது. அங்குள்ள மற்றொரு குழியிலிருந்து தொடர்ச்சியாகக் குழந்தைகளின் எலும்புகள் கிடைக்கப்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படிமங்கள் சோதனை செய்யப்பட்டு இவை எந்த ஆண்டில் வாழ்ந்தவை என்ற விவரம் தெரியவரும்.

தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும்சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக் கூடும் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியின் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்பொழுது பணிகள் இன்னும் வேகமாக முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications