கீழடி உறைகிணறு கூறும் உண்மை இதுதானா? தமிழருக்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் தொடர்பா?
கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. மார்ச் இறுதியில் கொரோனா ஊரடங்கால் 6ம் கட்ட அகழாய்வுகள் நிறுத்தப்பட்டது, பின் தளர்த்தப்பட்ட ஊரடங்கிற்குப் பின்னர், அகழாய்வுப் பணிகள் மீண்டும் மே 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணலூரில் நந்தப்பட்ட ஆய்வின் போது சுடு மண்ணாலான உலை, கீழடியில் அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் எலும்பு, தண்ணீர் செல்வதற்கான வடிகால் அமைப்பு, கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழி மற்றும் மனித எலும்புக்கூடுகள், 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு, அகரத்தில் நடந்த அகழாய்வில் மண்பானைகள் மற்றும் 17ம் நூற்றாண்டின் தங்க நாணயம் என பல்வேறு அரிய பொருட்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழடியில் சுமார் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டறியப்பட்டது. இந்த தொழிற்கூடத்தில் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளது. நெருப்பு மூலம் பொருட்கள் தயாரித்ததற்கு அடையாளமாகச் சிறிய கருப்பு நிற சாம்பல் துகள்கள் இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடி, முந்தைய காலத்தில் தொழில் நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றது. இன்னும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு பற்றிய சில நம்பமுடியாத உண்மைகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த உண்மைகளை ஹாங்காங்கை சேர்ந்த சித்ரா என்ற ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ளார்.

ஜூலை 2019 ஆண்டு கீழடி அகழாய்வின் போது, உறைகிணறு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடியில் ஒட்டுமொத்தமாக சுமார் 5 உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது, இவற்றில் ஒன்று சேதமடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டைச் சுவருக்கு அருகில் சுமார் 4 அடி உயரத்துடன் காணப்பட்ட உறைகிணறுகளை ஆராய்ச்சி செய்த பின் சில நம்ப முடியாத உண்மைகள் வெளியாகியுள்ளது. தமிழ் நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை இவை உணர்த்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கும் சுமேரியர்களுக்கும் தொடர்பா என்று நீங்களும் சந்தேகப்படலாம்? அதை இப்பொழுது தெளிவுபடுத்திவிடலாம். இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நாம் இந்தியாவிலிருந்து டைகிரிஸ் யுபரிடஸ் நதிக் கரையில் சிறந்து விளங்கிய சுமேரிய நாகரிகம் இருந்த இன்றைய ஈரான், ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்குச் செல்ல வேண்டும். சுமேரிய நாட்டில் சிறப்பான நாகரிகம் வாழ்ந்ததற்கான அடையாளங்களை அங்கு நடந்த அகழாய்வுகள் தெளிவாகக் காட்டுகிறது.

கி.மு. 3000 ஆண்டிற்கு முந்தைய பல விதமான மண்பாண்டங்கள், அணிகலன்கள் என்று பலபொருட்கள் இங்குக் கண்டறியப்பட்டுள்ளது. இங்குக் கிடைக்கப்பெற்ற பொருட்களை வைத்துப் பல ஆய்வாளர்கள் சுமேரிய நாகரிகத்திற்கும் தமிழர் நாகரிகத்திற்கும் தொடர்பு உள்ளது என்று பல ஆண்டாண்டுகளமாகத் தெளிவுபடுத்த முயன்று வருகின்றனர். ஆனால், அதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

ஆனால், இப்பொழுது நிலை அப்படி இல்லை. கீழடியில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் பல திருப்பங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுகள் சுமேரிய நாகரிகத்துடன் ஒப்பிட வாய்ப்பளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதேபோன்ற உறைகிணறுகள் மற்றும் 1800க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைத்திருக்கும் கீழடி தொன்மங்களின் படி தமிழர்களுக்கும் சுமேரியர்களுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் சுமேனியர்களும் நீர் ஓடும் வடிகால் அமைப்புகளுக்குப் பதிலாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு முறையைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.

ஆய்வாளர்களின் ஒரு சாரார் இது நீர் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளனர். மற்றொரு சாரார் இதைக் கழிவு நீர் வடிகால்தொட்டி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இது தொடர்பான கூடுதல் ஆராய்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications