கீழடியில் மேலும் இரண்டு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு! முதலில் பெரிய தலை இப்போ சிறிய தலை!
கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 6ம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியுள்ளது. கடந்த வாரம் இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்தது, அதே போன்று தற்பொழுது மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது.

இன்னும் பல மர்ம முடிச்சுகள் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே, தற்பொழுது நான்கு இடங்களில் நடைபெறும் அகழாய்வில், கொந்தகையில் உள்ள ஆராய்ச்சி தளத்தில் நேற்று மாலை இரண்டு குழந்தைகளின் முழு உருவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் பொது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு சுமார் 1.05 மீட்டர் அளவிலிருந்துள்ளது. மற்றொரு எலும்பு கூடு சுமார் 0.65 மீட்டர் அளவிலிருந்துள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முழு எலும்பு கூடுகளை ஆய்வுக்காக தற்பொழுது எடுத்து சென்றுள்ளனர்.

இந்த இரண்டு எலும்பு படிமங்களுக்கு முன்பு, ஏற்கனவே இம்மாதம் துவக்கத்தில் 7ம் தேதி அன்று ஒரு முழு எலும்புக்கூடும், அதனைத் தொடர்ந்து 13ம் தேதி அன்று மற்றொரு குழந்தையின் எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த மாதம் ஜீன் 19ம் தேதியும் ஒரு எலும்புக் கூடும் கண்டெடுக்கப்பட்டது என்பதையும் யாரும் மறக்க வேண்டாம். இதுவரை ஒட்டுமொத்தமாக 5 முழு உருவக் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொந்தகை அகழாய்வில் தற்பொழுது பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முதுமக்கள் தாழிகள் கிடைக்கப்பெற்றது, அதனைத் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றது. இந்த குழந்தை எலும்புக் கூடுகளின் பாலினம் மற்றும் வயது பற்றிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் இவற்றின் தலைகள் முன்பு கிடைத்த படிமங்களின் தலையை விடச் சிறிய அளவில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்பட்ட ஆய்விற்காக இவை ஆராய்ச்சிக்கூடத்திற்கு அனுப்பபட்டுள்ளது.

அதேபோல், மற்றொரு ஆராய்ச்சி குழியில் இன்னும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக்கூடுகளில் இரண்டு குழந்தைகளின் தலை பகுதி மட்டும் இயல்பை விட பெரியதாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்த பின்னர், இதன் வயது விபரம், இவை எந்த ஆண்டை சேர்ந்தவை என்ற பல உண்மைகள் வெளிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications