அடச்சே.. இந்த ஐடியா நமக்கு வராம போச்சே.. Elon Musk-ற்கு கொக்கி போட்ட கர்நாடக அரசு.. எப்டிலாம் யோசிக்கிறாய்ங்க!
கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (Minister for Commerce and Industries) ஆன எம்பி பாட்டீலின் (MB Patil) சமீபத்திய ட்வீட்டை பார்க்கும் போது "அடச்சே.. இந்த யோசனை மக்கு வராம போச்சே!" என்று மற்ற மாநிலங்களின் அமைச்சர்களுக்கு தோன்றினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதென்ன ட்வீட்? உலக பணக்காரர்களில் ஒருவருமான மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க்கை (Elon Musk), தனது ட்வீட் ஒன்றில் டேக் (Tag) செய்து, உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே "உலக மகா பிஸ்னஸ்" வேலையொன்றை பார்த்து உள்ளார் கர்நாடக அமைச்சர் எம்பி பாட்டீல்.

அரசுமுறை பயணமான அமெரிக்க சென்றுள்ள நரேந்திர மோடியை சந்தித்த எலான் மஸ்க், இந்தியாவில் வணிகம் செய்வதற்கான தனது விருப்பங்களை வெளிப்படுத்திய வேகத்தில், "இந்தியாவில், டெஸ்லா நிறுவனத்தை விரிவாக்குவதற்கான சிறந்த இடம் கர்நாடகா தான்" என்று கர்நாடக அமைச்சர் எம்பி பாட்டீல் ட்வீட் செய்துள்ளார்.
"ஒருவேளை டெஸ்லா நிறுவனமானது அதன் பெரும் ஆற்றல் மற்றும் திறன்களை இந்தியாவிற்கு கொண்டு வர விரும்பினால், கர்நாடகாவில் ஒரு ஆலையை அமைப்பதே சரியான தேர்வாக இருக்க முடியும் என்று நான் கூறுவேன்" என்றும் எம்பி பாட்டீல் தனது ட்வீட்டில் எழுதி உள்ளார்.
மேலும் "முற்போக்கு மாநிலமாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் செழிப்பான மையமாகவும் இருப்பதால், டெஸ்லா நிறுவனதிற்கு மட்டுமின்றி ஸ்டார்லிங்க் (Starlink) போன்ற மற்ற முயற்சிகளுக்கு தேவையான வசதிகளை ஆதரிக்கவும், வழங்கவும் கர்நாடக அரசு தயாராக உள்ளது" என்றும் எம்பி பாட்டீல் கூறி உள்ளார்.
கடைசியாக எம்பி பாட்டீலின் ட்வீட் ஆனது "அடுத்த 2 தசாப்தங்களுக்கு மாநிலத்தை முன்னெடுத்து செல்ல, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திக்கான 5.0-இல் (Technology and manufacturing 5.0) கர்நாடக அரசு கவனம் செலுத்துகிறது. கர்நாடக முதல்வரும், நானும் டெஸ்லாவிற்கான அழைப்பை விடுக்கிறோம்" என்று கூறி முடிகிறது.
இருப்பினும் இந்த ட்வீட்டிற்கு (தற்போது வரையிலாக) எலான் மஸ்க் எந்த பதிலும் அளிக்கவில்லை, ஆனாலும் அவர் எப்போதுமே ட்விட்டரில் ஆக்டிவ் ஆக இருப்பார், ட்விட்டர் வழியாக அவரை மிகவும் எளிமையாக அணுகலாம் என்பதை நன்கு அறிந்து, அதன் வழியாகவே கோரிக்கை விடுத்துள்ள எம்பி பாட்டீலின் செயல் உண்மையிலேயே - அட்டகாசம் தான்!
டெஸ்லா நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையின் இருப்பிடத்தை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், தனது கார் நிறுவனமான டெஸ்லா கூடிய விரைவில் இந்தியாவிக்ரு வரும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கர்நாடக அமைச்சர் எம்பி பாட்டீல் அவரது ட்வீட்டில், டெஸ்லாவை மட்டுமே குறிப்பிட்டு இருக்க வேண்டும். தேவை இல்லாமல் ஸ்டார்லிங்க் திட்டத்தை பற்றியும் பேசிவிட்டார் என்றே கூறலாம். ஏனென்றால், ஸ்டார்லிங்க் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மிகவும் கடுமையாக எதிர்க்கிறார்.
அறியாதோர்களுக்கு ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக்கோள் வழியிலான பிராட்பேண்ட்டை வழங்குமொரு சேவையாகும். ஆனால் இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள் சேவையானது பாரம்பரியமான இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கும்; சமநிலையை குலைக்கும் என்று கூறி ரிலையன்ஸ் ஜியோ இதை கடுமையாக எதிர்க்கிறது.


Click it and Unblock the Notifications