Karnataka சித்தராமையா சம்பவம்.. Instagram, Facebook, X கதை க்ளோஸ்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிமேல்?
கர்நாடக (Karnataka) முதல்வர் ஆன சித்தராமையா, 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதில், மாநிலம் தழுவிய தடையை விதிக்கப்போவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில், ஆண்டு மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
"குழந்தைகள் மீது அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளை தடுக்கும் நோக்கத்துடன், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களின் பயன்பாடு தடை செய்யப்படும்" என்று கர்நாடக முதல்வர் ஆன சித்தராமையா கூறினார். இந்த முடிவின் மூலம், குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கும் நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.

முன்னதாக, ஆந்திரா மற்றும் கோவா அரசாங்கங்கள் இதே போன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக கூறின. ஆனால் குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாட்டை "தடை செய்வது" என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது கர்நாடகா தான். நாட்டின் முன்னணி தொழில்நுட்ப மையமான பெங்களூருவை கொண்டுள்ள இந்த மாநிலம், இந்த திட்டத்தை பல வாரங்களாக பரிசீலித்து வருகிறது.
கடந்த மாதம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு யோசித்தது. முன்னதாக, மாணவர்களிடையே அதிகரித்து வரும் சமூக ஊடக மோகம் குறித்து சித்தராமையா கவலை தெரிவித்து இருந்தார், மேலும் இது நடத்தை, கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றும், போதைப்பொருட்களுக்கு ஆளாவது அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனான சந்திப்பின் போது, குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்துவதன் சாத்தியக்கூறு மற்றும் சாத்தியமான விளைவுகள் குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டபோது அவர் இந்த பிரச்சினையை எழுப்பினார். துணைவேந்தர்களிடம் உரையாற்றிய சித்தராமையா, இந்த விஷயம் விவாதத்தில் இருப்பதாகவும், அவர்களின் கருத்து முக்கியமானது என்றும் கூறினார்.
குழந்தைகள் போதைப்பொருட்களுக்கு இரையாகி வருவதாகவும், பலர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவதாகவும் அவர் கூறினார். அதிகப்படியான ஸ்க்ரீன் டைம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து ஈடுபடுவது கல்வி செயல்திறன், நடத்தை மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்றும், கட்டுப்பாடற்ற ஆன்லைன் அணுகல் இளம் பயனர்களை தீங்கு விளைவிக்கும் கன்டென்ட்டிற்கும், சில சந்தர்ப்பங்களில், போதைப்பொருள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய நெட்வொர்க்குகளுக்கும் ஆளாக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்தில், ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat), யூட்யூப் (YouTube) மற்றும் எக்ஸ் (X - அதாவது டிவிட்டர்) போன்ற சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடுக்கும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications