இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? மத்திய அமைச்சர் விளக்கம்..
உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்(Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளார். அதுவும் இந்த ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை நிறுவனங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்த பிறகு தான் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதுவும் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது என்னவென்றால், அலைக்கற்றை விலை நிர்ணயப் பணிகள் முடிந்தவுடன் ஸ்டார்லிங்க், ஒன்வெப் (OneWeb) மற்றும் ஜியோ எஸ்ஜிஎஸ் (Jio SGS) போன்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக ஸ்டார்லிங்க் நிறுவனம் சேவை தொடங்குவது இரண்டு முக்கிய காரணிகளை சார்ந்திருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார். அதாவது முதலில் பாதுகாப்பு முறையை முழுமையாகப் பின்பற்றுவது, இரண்டாவது அலைக்கற்றைக்கான விலை நிர்ணயம்.
அதேபோல் உரிமம் பெற்ற நிறுவனங்களான ஒன்வெப், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டார்லிங்க் ஆகியவை சர்வதேச கேட்வேக்கள் (Gateways) தொடர்பான பாதுகாப்பு அனுமதிகளைப் பெற வேண்டும். இதுதவிர இந்தியர்களின் தரவுகள் நாட்டிற்குள்ளேயே மிகவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சிந்தியா விளக்கினார்.
மேலும் நிதி சார்ந்த விஷயங்களை பொறுத்தவரை, தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆகியவை இணைந்து அலைக்கற்றைக்கான விலையை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன இது விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுவும் செயற்கைகோள் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் ஒரு இணைப்பிற்கு ரூ.500 கட்டணத்தை நீக்குவது மற்றும் ஆண்டு அலைக்கற்றை கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவது போன்ற தொலைத்தொடர்பு துறையின் பல பரிந்துரைகளை டிராய் சமீபத்தில் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இது தொடர்பான இறுதி முடிவை டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷன் எடுக்கும். அதன் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.

ஒன்வெப், ஜியோ எஸ்ஜிஎஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்தியாவில் சேட்டிலைட் இணையச் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும். இது மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் சேவை தொடங்கப்பட்டால், இந்தியாவின் குக்கிராமங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளிலும் அதிவேக இணைய வசதி தடையின்றிக் கிடைக்கும்.
பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலமாக இன்டர்நெட் சேவை கிடைக்க உள்ளது. மேலும் இந்த ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பொறுத்தவரை வழக்கமான Geostationary satellites விட முற்றிலும் வித்தியாசமானது. அதாவது ஸ்டார்லிங் நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் LEO செயற்கோள்களை பயன்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








