வேலை வாய்ப்புகள்: அடிமடியில் கை வைக்கும் மோசடி கும்பல்., WhatsApp இல் இதை தொட்டால் கெட்டோம்!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி நடைபெறும் மோசடிகளை "வெற்றிக் கொடி கட்டு" திரைப்படம் காலத்தில் இருந்து பார்த்து வருகிறோம். ஆனால் இது டிஜிட்டல் காலம் அல்லவா எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி கும்பல்கள் கிளம்பி இருக்கிறது. இதுகுறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் வேலை மோசடிகள்
நாட்டில் வேலை தேடுபவர்களில் 56% பேர் வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ஆன்லைன் வேலை மோசடிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி
சமீபத்தில் ஒரு மோசடி கும்பல் மின்சார கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி மோசடி செய்வது குறித்து எச்சரித்து இருந்தோம். அதன்படி தற்போது வேலை தேடும் அப்பாவி இளைஞர்களை குறிவைத்து மோசடி கும்பல்கள் களமிறங்கி இருக்கிறது.

வேலை வாய்ப்பு தளங்கள்
புதிதாக வேலை தேடுபவர்கள், பணி முன்னேற்றம், பணி மாற்றம் என பலர் வேலை வாய்ப்பு அணுகலை பெற முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக கொரோனா தொற்று நோய் காரணமாக பலர் வேலை இழந்து புதிய வேலைகளை நோக்கி பயணம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் பல்வேறு தளங்களை அணுகுகின்றனர். இதில் பல இடங்களில் தங்கள் மொபைல் எண்ணையும் பதிவிடுகின்றனர்.
இதுதான் மோசடி செயலுக்கு ஆரம்பமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

56% பேர் மோசடிக்கு உள்ளாவதாக தகவல்
நாட்டில் வேலை தேடுபவர்களில் 56% பேர் இந்த மோசடிக்கு உள்ளாகின்றனர்.
அதிலும் வேலை தேடும் இளைஞர்கள் (20 முதல் 29 வயது) தான் இந்த வேலை மோசடிகளுக்கு பலியாகின்றனர் என ஒரு தனியார் தளத்தின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

வாட்ஸ்அப் வேலை வாய்ப்பு மோசடி
மோசடியாளர்கள் தற்போது மக்களை ஏமாற்றுவதற்கு மிகவும் புதிய நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப் தளத்தில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
இதில் வேலை வாய்ப்பு உறுதி, கவர்ச்சிகரமான வேலை, ஊதிய விவரங்கள் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு ஆசையை தூண்டுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கில் சம்பளம்
இதுகுறித்து நியூஸ்18 பகிர்ந்த ஸ்க்ரீன் ஷாட்டில் " Dear, எங்கள் நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள், ஊதியம் ரூ.8000/நாள். தயவுசெய்து கலந்துரையாடல் விவரத்தை தொடர்பு கொள்ளவும்: wa.me/919165146378 SSBO." என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.8000 சம்பளம்
இதேபோல் பல்வேறு எண்களில் இருந்து மெசேஜ்கள் வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.8000 சம்பளம் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.
இதை படிக்கும் உங்களுக்கும் ஏதாவது தோன்றுகிறதா? ஆம் நமக்கும் இதேபோல் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் என்று ஒரு மெசேஜ் வந்ததே என்று. அப்படி தோன்றினால் இது மோசடிக்கு நீங்களும் குறி வைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ நபர் போல் பேசுவார்கள்
இந்த மெசேஜில் வரும் wa.me என்ற லிங்க்கை கிளிக் செய்தால் நேரடியாக WhatsApp சேட்டிங் தளத்திற்கு அழைத்து செல்வீர்கள். இதன்மூலம் தொடர்பு கொள்பவர் அதிகாரப்பூர்வ நபர் போன்று பேசி, உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்பார்கள் பின் வேலையில் சேருவதற்கு UPI மூலம் பதிவுக் கட்டணம் அனுப்பச் சொல்லுவார்கள். இதை ஒரு போதும் செய்துவிட வேண்டாம்.

டெல்லி சைபர் காவல்துறை எச்சரிக்கை
டெல்லி சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இதில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை வழங்கியுள்ளனர். naukari.com. shine.com போன்ற வேலைத் தேடும் தளங்களில் இருந்து நபர்களின் மொத்த பயோ டேட்டா, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பெறுகின்றனர்.
இதில் ஒருவரின் கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை பெற்றுக் கொள்கின்றனர். இதை மையமாக வைத்து ஒருவரை குறி வைக்கத் தொடங்குகின்றனர்.
மின்னஞ்சல், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்கள் மூலம் மெசேஜ் அனுப்பி தங்கள் லீலைகளை மோசடி கும்பல் தொடங்குகின்றனர்.

ஆன்லைன் மோசடிகளை கண்டறிய சில வழிமுறைகள்:
முறையாக பணியில் சேர்ப்பவர்கள் எந்த சூழலிலும் பெரிய தொகை எதுவும் கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான மின்னஞ்சல் கணக்குகள், லோகோக்களை பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரின் நோக்கமும் பணம் பெறுவது தான். எந்த நிலையிலும் முன்பணம் செலுத்த வேண்டாம். முன்பணம் கேட்பவர்களிடம் உஷாராக இருப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications