ஜியோஃபைபர்: 2 மாத இலவச சேவை! ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு அடித்தது லக்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதாவது நாளை முதல் அதிகாரப்பூர்வமாக அதன் வணிக ரீதியிலான அறிமுகத்தை இந்தியாவில் துவங்குகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி இந்த அறிவிப்பை அறிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையானது அறிமுகம் செய்யப்பட்டது. அதன்கீழ், இந்தியாவில் உள்ள சில நகரங்களில் மட்டும் ஜியோ தனது சோதனை பயன்பாட்டை நடத்தி வந்தது. இந்த சோதனை காலத்தில் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவை ரூ.2500 என்கிற பாதுகாப்பு வைப்பு நிதியுடன் பயனர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை காலத்தில் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்திய தனது முன்பதிவு வாடிக்கையாளர்களை 'ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்' என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. இந்த ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு தான் இப்போது லக் அடித்துள்ளது.

கடந்த ஆண்டில் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில், முன்பதிவு செய்த 'ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்'களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் நாளை முதல் அடுத்த இரண்டு மாத காலத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையை அவர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதென்று அறிவித்துள்ளது.

அதேபோல் இவர்கள் முன்பு செலுத்திய வைப்பு நிதியும் திரும்பத் தரப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது. ப்ரிவியூ கஸ்டமர்கள் முன்பு செலுத்திய ரூ.2500 முன் தொகையிலிருந்து ரூ.1000 இன்ஸ்டாலேஷன் தொகையாக எடுத்துக்கொள்ளப்படும், மீதம் உள்ள ரூ.1500 ஜியோஃபைபர் நாளை அறிமுகம் செய்யப்பட்டபின் முந்தைய பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் அம்பானி தெரிவித்தது போல, ஜியோஃபைபர் டேரிஃப் பிளான்கள் மாதத்திற்கு ரூ.700 முதல் ரூ.10,000 வரை இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த-எந்த திட்டங்கள் என்ன சேவைகளுடன், சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படப்போகிறது மற்றும் இவற்றின் விலைப் பட்டியல் என்ன என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக முகேஷ் அம்பானி அறிவித்த 'ஜியோஃபைபர் வெல்கம்' திட்டத்தின் விலைப் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஜியோஃபைபர் வெல்கம் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸ் மற்றும் 4K HD டிவி ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ் வருடாந்திர 'ஜியோ ஃபாரெவர்' திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிபந்தனையும் ஜியோ விதித்துள்ளது.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவை பற்றிய முழு விபரங்கள் மற்றும் விலைப் பட்டியல்கள் எப்பொழுதும் வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஜியோ பயனர்கள் காத்திருக்கின்றனர். எப்படியும் நாளை ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது என்பதனால் நாம் காத்திருக்க வேண்டியது தான் இப்போதைக்கு ஒரே வழி.


Click it and Unblock the Notifications