Jio தலையில் இடி.. அடி வைக்கும் எலான் மஸ்க்.. சாட்டிலைட் இன்டர்நெட்.. வயிற்றில் புளியை கரைக்கும் ஸ்டார்லிங்க்!
இன்டர்நெட் சேவையில் போட்டிக்கே ஆளில்லாமல் ஓங்கி உயர்ந்து நிற்கும் ஜியோ (Jio) நிறுவனமே, இப்போது விடாகண்டன் கொடாகண்டன் கதை போல எலான் மஸ்க் வருகையால் பீதியில் இருக்கிறது. வெறும் அனுமதி போதும், இந்தியாவில் புதிய டெலிகாம் சாம்ராஜியத்தை அவரால் உருவாக்கிவிட முடியும்.
ஜியோவின் 4ஜி சேவைக்கு பின்பு, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற எந்தவொரு நிறுவனமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இருக்கும் கஸ்டமர்களை தக்க வைக்கவே அந்த நிறுவனங்கள் படாதபாடுபடுகிறது. சொல்லப்போனால், மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து ஜியோவுக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இப்படியே போனால், அடுத்த 10 ஆண்டுகளில் ஜியோ நிறுவனமானது, போட்டிக்கே ஆளில்லாமல் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் தனித்தே கட்டி ஆழவும் வாய்ப்பு இருக்கிறது. இதையே ஜியோ நிறுவனமும் மனதில் வைத்து, அதற்கான காய்களை அடுத்தடுத்து நகர்த்தி வருகிறது. இப்படிப்பட்ட ஜியோவே, இப்போது மிரண்டுபோய் இருக்கிறது.
மிகப்பெரும் பில்லியனரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு வர இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு வரும் ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த சந்திப்புக்கு பிறகு, டெஸ்லா நிறுவனத்தின் ஆலைகளை இந்தியாவில் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே, இந்த டெஸ்லா ஆலை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்திருந்தார். இப்படி ஒட்டுமொத்த கவனமும் டெஸ்லா ஆலை மீதே இருக்கிறது. ஆனால், ஜியோ, ஏர்டெல் (Airtel) நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங் (Starlink) குறித்த அறிவிப்பின் மீதே முழு கவனம் இருக்கிறது.

ஏனென்றால், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனமானது, நேரடியாக சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. ஏற்கனவே, 32 நாடுகளுக்கும் மேல் ஸ்டார்லிங் சாட்டிலைட் இன்டர்நெட் (Starlink Satellite Internet) சேவையை வழங்கி வருகிறது. ஆனால், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றன.
சொல்லப்போனால், 2022ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் சாட்டிலைட் (Global Mobile Personal Communication Satellite) உரிமத்துக்காக ஸ்டார்லிங் விண்ணப்பித்து இருந்தது. இதுகுறித்த பேச்சு வார்த்தையை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடத்தியது.
இருப்பினும், அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே, ஜியோவின் கீழ் இயங்கும் ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி (Jio Space Technology) நிறுவனம், குஜராஜ், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மாநிலங்களில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை சோதனை முயற்சியில் வழங்கி வெற்றி பெற்றது. ஆகவே, இந்த சந்திப்பின் போது, ஸ்டார்லிங்க் குறித்த அறிவிப்புக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சுமார் 30 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் மதிப்பிலான முதலீட்டை எலான் மஸ்க் இந்தியாவில் அறிவிக்க இருக்கிறாராம். இதில் டெஸ்லாவுக்கு அடுத்தப்படியாக ஸ்டார்லிங் நிறுவனத்தின் மீது முதலீடு இருக்க வாய்ப்புள்ளதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஸ்டார்லிங் இந்தியாவுக்கு வந்தால், அது ஜியோவுக்கு மிகப்பெரும் சவாலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதே நேரத்தில், ஜியோவை போல மலிவான விலையில் ஸ்டார்லிங் சேவைகள் கிடைக்குமா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அமெரிக்காவில் ஸ்டார்லிங் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகளுக்கு பேஸிக் கட்டணமாக மாதம் 120 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10,033) வசூலிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த வீட்டுக்கும் வை-பை சேவையை கொடுக்கிறது.
அதிகபட்சமாக 220 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா வேகம் இருக்கிறது. சாட்டிலைட் மூலம் கிடைக்கும் வயர்லெஸ் டேட்டா என்பதால், டவர் கிடைக்காத இடங்களிலும் எளிதாக இன்டர்நெட் சேவையை வழங்க முடியும். அதேபோல நிறுவுவதற்கான காலமும் மிகவும் குறைவு என்பதால், இந்த சேவையை அதிவிரைவில் மக்களுக்கு வழங்க முடியும். ஆனால், மத்திய அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.


Click it and Unblock the Notifications








