எல்லாரும் ரெடியா? அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயர்வு! பழைய விலை இனி இல்ல..
Jio மற்றும் Airtel தங்கள் மொபைல் திட்டங்களின் விலையை விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண விலையை 10 சதவீதம் வரை உயர்த்தும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே அதன் மலிவான ப்ரீபெய்ட் திட்டமான ரூ.99 பிளானை ரத்து செய்தது. கடந்த பல நாட்களாக தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வரும் வோடபோன் ஐடியா இந்த விலை உயர்வை முதலில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயனர்கள் புதிய ரீசார்ஜ் திட்ட விலைக்கு இப்போதே தயாராவது நல்லது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆகிய இரண்டுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம்.

புதிய விலைகள் விரைவில்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது உள்ள திட்டங்களின் விலையில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தும் என தகவல்கள் தெரிவிக்கிறது. பயனர்கள் தங்கள் மொபைல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான புதிய விலைகளை விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் விலை உயரும்
இதுகுறித்த Jefferies ஆய்வாளர்களின் அறிக்கைப்படி, ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது FY23, FY24 & FY25 இல் 10 சதவீத வரை கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுகளின் நான்காவது காலாண்டிலும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் உயர்வை பயனர்கள் சந்திப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேலையைத் தொடங்கிய ஏர்டெல்
நிறுவனங்களின் வருவாய் மற்றும் மார்ஜின்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதே விலை உயர்வுக்கு காரணம் என்று அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே அதன் தற்போதைய திட்டங்களில் சிலவற்றின் கட்டணத்தை உயர்த்தத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ஏர்டெல்
அதேபோல் ஏர்டெல் அதன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டமான ரூ.99 திட்டத்தை திரும்பப் பெற்றது. இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திட்டமாக இருந்தது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் ஜீ5 ப்ரீமியமுக்கான அணுகலை வழங்கியது. இந்த திட்டம் 18 நாள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டிருந்தது. ரத்து செய்த பிறகு இதே நன்மைகள் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் மீண்டும் ரூ.155 என்ற விலையில் அறிமுகம் செய்தது.

ஜியோ பிளான்
எது எப்படியோ தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கண்டிப்பாக விலை உயர்வை அறிவிக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. முதலில் விலை உயர்வை அறிவிக்கும் நிறுவனம் ஏர்டெல் அல்லது விஐ ஆக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை உயர்வை பார்த்த பிறகு தான் ஜியோ கடைசியாக விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இதுதான் நடந்தது. விலை உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் பிற நிறுவனங்களை விட ஜியோவின் ரீசார்ஜ் திட்ட விலைகள் தான் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான போட்டியில் ஜியோ, ஏர்டெல்
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் அறிமுகமான ஜியோ அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்னதாக தொய்வு நிலை கண்ட ஏர்டெல் சமீப காலமாக உச்சத்தை தொட்டு வருகிறது. முதலிடத்தில் இருக்கும் ஜியோ மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக 5ஜி அறிமுகமான பிறகு.

கடுமையான இழப்பை நோக்கி விஐ
இந்தியாவின் மொத்த மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 3.6 மில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய ஜாம்பவனாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை மாதந்தோறும் அதிக பயனர்களை இணைத்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது இடத்தில் இருக்கும் விஐ கடுமையாக வாடிக்கையாளர்கள் இழப்பை சந்தித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications