ரெடியா? பெங்களூரு மெட்ரோவை அதிர வைத்த Jio- 5G வேகத்தில் ஆதிக்கம், 10 மடங்கு அதிகம்
இந்தியாவில் 5ஜி சோதனை முழுவீச்சில் மும்முரமாக நடந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இல் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ சோதனை செய்தது. மெட்ரோ ரயிலில் 5ஜி சோதனை செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க் இதுதான் என்பது இதன்மூலம் உறுதியாகி இருக்கிறது.

ஜியோவுடன் இணைந்த பெங்களூரு மெட்ரோ கார்ப்பரேஷன்
இதுகுறித்த BMRCL இன் ட்வீட் படி, பெங்களூரு மெட்ரோ கார்ப்பரேஷன் ஜியோவுடன் இணைந்து ஒரு பைலட் திட்டத்தின் கீழ் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்கிறது. ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது தற்போது பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தின் 200 மீட்டர் சுற்றளவில் கிடைக்கிறது. அதேபோல் எம்ஜி ரோடு மெட்ரோ நிலையத்தில் வைத்துள்ள ஜியோ 5ஜி போர்டையும் BMRCL ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகம்
அதிகாரப்பூர்வ ட்வீட்டின் படி, ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது. 1.45Gbps என்றால் எவ்வளவு வேகம் என்று தெரியுமா?. பெங்களூருவில் உள்ள ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகமானது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம் ஆகும். இருப்பினும் பதிவிறக்க வேகத்தை ஒப்பிடுகையில் பதிவேற்ற வேகம் ஆனது சற்று குறைந்ததாகவே இருக்கிறது.
4ஜியை விட பல மடங்கு வேகம்
தற்போதைய 4ஜி நெட்வொர்க் உடன் ஒப்பிடும் போது 5ஜி நெட்வொர்க்கின் பதிவேற்ற வேகம் மிக அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இது சோதனை கட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோதனை கட்டமே இத்தனை வேகமாக இருந்தால் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது இணைய வேகம் அதீத அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேகத்தை போல் விலையும் அதிகம் தான்
தற்போதைய தகவலின்படி, ஜியோ மற்றும் TRAI 5ஜி நெட்வொர்க்கின் திறன்களை சோதித்து வருகின்றன. இது 4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தற்போது செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியது இருக்கும் என கணிக்கப்படுகிறது.

விடாமுயற்சியில் ஜியோ 5ஜி
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை, ஜியோ அதிக வாடிக்கையாளர்களுடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. வரவிருக்கும் 5ஜி சேவையிலும் ஜியோ இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு நடவடிக்கையை ஜியோ சமீபத்தில் எடுத்தது.

ரூ.14,000 கோடி EMD கட்டணமாக டெபாசிட்
5ஜி சேவைக்கான ஏலம் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்கு அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு ரூ.14,000 கோடியை EMD கட்டணமாக டெபாசிட் செய்துள்ளது. ஜியோவின் இந்த டெபாசிட் தொகை பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே முடிவுக்கு வர வேண்டாம்?
ஜியோ ரூ.14,000 கோடி டெபாசிட் செய்திருக்கும் நிலையில், இந்தியாவில் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் பாரதி ஏர்டெல் 5ஜி ஏலத்திற்கு ரூ.5,500 கோடி இஎம்டி கட்டணமாக டெபாசிட் செய்திருக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியா 5ஜி ஏலத்திற்கு ரூ.2,200 கோடி தொகை டெபாசிட் செய்துள்ளது. ஜியோவின் டெபாசிட் தொகையை வைத்தே கணித்து விடலாம், 5ஜி இல் யாருக்கு அதிக ஆதிக்கம் இருக்கும் என்று. சரி, ஜியோ தான் 5ஜியில் பெஸ்ட் ஆக இருக்கப் போகிறது என்று தோன்றுகிறதா?. அது சந்தேகம் தான்.

நான்காவதாக களமிறங்கும் நிறுவனம்
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஒரு புறம் போட்டிப்போட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் நான்காவது நிறுவனமாக அதானி குழுமம் களமிறங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதானி குழுமம் சில தினங்களுக்கு முன்பு என்எல்டி மற்றும் ஐஎல்டிக்கான உரிமத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதானி குழுமத் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

5ஜி சேவையில் கடும் போட்டி இருக்குமா?
ரிலையன்ஸ் ஜியோ ரூ.14,000 கோடி டெபாசிட் செய்திருக்கிறது. அடுத்து இருக்கும் ஏர்டெல் ரூ.5,500 கோடி டெபாசிட் செய்திருக்கிறது. இரண்டு தொகைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலையில் அதானி குழுமம் ஜியோவை விட அதிக முதலீடு செய்யாவிட்டாலும் ஜியோவுக்கு நெருக்கமான தொகையை டெபாசிட் செய்யும்பட்சத்தில் 5ஜி சேவையில் சற்று நெருக்கமான போட்டியை எதிர்பார்க்கலாம்.

5ஜி ஏலத்தில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்கும்?
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் ஆசியப் பணக்காரர் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றனர். அடுத்த சில தினங்களில் நடப்பதாக கூறப்படும் 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்றால், அம்பானியுடன் அதானி மோதும் முதல் நேரடி போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

5ஜி சேவையின் ஆதிக்க நிறுவனம் எது?
இன்னும் சில தினங்களில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் நடக்க இருக்கிறது. இதில் 20 ஆண்டுகளுக்கான 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒதுக்கீடு ஏலத்தில் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ முதலீடு வைத்து தான் 5ஜி சேவையின் ஆதிக்க நிறுவனம் எதுவாக இருக்கும் என்ற தகவல் முழுமையாக தெரியவரும்.


Click it and Unblock the Notifications