திக் திக் நிமிடங்கள்.. கடைசி நேரத்தில் நிலவில் மோதிய ஜப்பான் விண்கலம்.. தப்பிக்குமா ISRO-வின் சந்திராயன்-3?
சந்திர கிரகத்தில் தரை இறங்கிய முதல் தனியார் விண்கலம் (First Private Company to Land on the Moon) என்கிற வரலாற்று சாதனைக்காக கடுமையாக உழைத்து, கிட்டத்தட்ட நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறங்க வேண்டிய கடைசி நேரத்தில் - எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது!
நேற்று இரவு ஜப்பானை சேர்ந்த ஐஸ்பேஸ் (iSpace) நிறுவனத்திற்கு சந்திர கிரகத்தின் மேற்பரப்பில் நடந்த சோகத்தை பார்க்கும் போது, கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு (ISRO - Indian Space Research Organization ) நடந்ததை அப்படியே நினைவூட்டுகிறது.

ஹகுடோ-ஆர் எம்1 (Hakuto-R M1) என்கிற மூன் லேண்டர் (Moon Lander) மற்றும் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த ரஷீத் (Rashid) என்கிற ரோவர் (Rover) உடன் நிலவில் தரை இறங்க திட்டமிட்ட ஐஸ்பேஸ் நிறுவனத்தின் முயற்சி, கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது.
என்ன நடந்தது? திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கி சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகும் கூட, ஐஸ்பேஸ் நிறுவனத்தால் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்கிற காரணத்தினால், குறிப்பிட்ட லேண்டர் மற்றும் ரோவர் ஆனது நிலவுடன் மோதி விபத்துக்குளாகி இருப்பதற்குவாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஐஸ்பேஸ் நிருவானம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2-க்கு நேர்ந்த அதே கதி! ஜப்பானை சேர்ந்த ஐஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த தோல்வியானது இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலத்தின் தோல்வியை உங்களுக்கு ஞாபகப்படுத்தினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அறியாதோர்களுக்கு சந்திரயான் 2 மிஷனின் விக்ரம் லேண்டரும் கூட இதேபோல தான்.. நிலவில் தரை இறங்கும் கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது.
இந்த இடத்தில் தான் 2 சிக்கலான கேள்விகள் எழுகின்றன! ஐஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய தோல்வியானது.. "இதுவரை உலகின் மூன்று நாடுகளால் (அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா) மட்டுமே சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்க முடிந்துள்ளது" என்கிற விண்வெளி வரலாற்றை நீட்டித்துள்ளது. இந்த இடத்தில் தான் 2 சிக்கலான கேள்விகள் எழுகின்றன.
முதல் கேள்வி - பூமியில் இருந்து சுமார் 3,84,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவில் தரை இறங்குவது ஏன் இவ்வளவு சிக்கலான , சவாலான விஷயமாக இருக்கிறது? இரண்டாவது கேள்வி - சந்திராயன் 2-வின் தோல்விக்கு பின்னால் உருவாகும் சந்திராயன் 3 மிஷன் கண்டிப்பாக வெற்றி அடையுமா? நிலவில் தரை இறங்கிய 4வது நாடு என்கிற பெருமைக்கு இந்தியாவிற்கு இம்முறையாவது கிடைக்குமா?
நிலவில் தரை இறங்குவது ஏன் கடினமான காரியமாக உள்ளது? பூமியை பொறுத்தவரை, ஜிபிஎஸ் (GPS) மற்றும் நேவிகேஷனை (Navigation) பயன்படுத்தி ஒரு நிலையில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதென்பது மிகவும் எளிமையான காரியமாகும். ஆனால் சந்திர கிரகம் என்று வரும் போது - அது அவ்வளவு எளிதல்ல.
ஒரு லேண்டர், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறங்க வேண்டுமென்றால், வெறும் 100 கிலோமீட்டருக்குள் 6000 கிமீ வேகத்தில் இருந்து பூஜ்ஜியத்திற்கு வர வேண்டும்; அப்போது தான் நிலவில் மிகவும் மெதுவாக தரை இறங்க முடியும். ஐஸ்பேஸின் ஹகுடோ-ஆர் எம்1 லேண்டர் இதை செய்யவில்லை!
ஒரு மூன் லேண்டிங் மிஷன் தோல்வியில் முடிய மற்றொரு முக்கியமான காரணி - தொடர்பு (Communication). நிலவின் அருகே செல்லும் விண்கலங்கள் ஆனது உலகம் முழுவதும் பரவியுள்ள டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் வழியாகவே தொடர்பு கொள்ளப்படுகின்றன. அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், குறிப்பிட்ட விண்கலமானது பார்வையை இழந்ததற்கு சமமாகும்!
எல்லாவற்றிற்கும் மேலாக, சந்திர கிரகத்தின் மேற்பரப்பானது, நீளமான மற்றும் கரடுமுரடான விளிம்புகளை கொண்ட பள்ளங்களையும் (Craters) கொண்டுள்ளது. எனவே, எல்லாமே சரியாக நடந்தாலும் கூட, ஒரு விண்கலம் தரை இறங்கும் நிலப்பரப்பானது சரியாக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கூட, அது தோல்வியில் தான் முடியும்
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க இஸ்ரோ என்னென்ன செய்து வருகிறது? இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது (Chandrayaan 3 mission) இறுதிக்கட்ட ஆயத்தப்பணிகளில் உள்ளது. இது இந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் நிலவை நோக்கி விண்ணில் ஏவப்பட அதிக வாய்ப்புள்ளது.
இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரயான்-3 விண்கலமானது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் (Landing) மற்றும் சந்திர கிரகத்தின் நிலப்பரப்பில் உலாவுதல் (Roving) ஆகியவற்றில் எண்ட்-டூ-எண்ட் திறனை (End-to-end capability) வெளிப்படுத்தும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் நிலவில் தரை இறங்கிய 4வது நாடு என்கிற பெருமை "இம்முறை" இந்தியாவிற்கே கிடைக்கலாம்!


Click it and Unblock the Notifications








