இஸ்ரோ எடுத்த முடிவு.. தனியாருக்கு கைமாறிய செயற்கைக்கோள் தொழில்நுட்பம்.. எந்த நிறுவனம் வாங்கியது?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ (ISRO), பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம், உலகமே வியந்துபார்த்த 100 கிலோ எடைக் கொண்ட செயற்கைக்கோள்களை உருவாக்க பயன்படுத்தும் சாட்டிலைட் பஸ் தொழில்நுட்பத்தை (Satellite Bus Technology) கொடுத்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
பொதுவாக விண்வெளித்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளை கவனித்து பார்த்தால், அவற்றின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். சொல்லப்போனால், அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), விர்ஜின் கேலடிக் (Virgin Galactic) போன்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், நமது இஸ்ரோவுக்கு நிகரான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளன.

இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாக கொண்டிருந்தாலும், அவற்றின் புதுப்புது ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் அந்த நாட்டின் விண்வெளித்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுவிடும். இதனாலேயே, வளர்ந்துவரும் நாடுகள் தங்களது, விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் தனியாருக்கான பங்கீட்டை ஊக்குவித்து வருகின்றன. இதற்கு, இந்தியாவும் விதிவிலக்கல்ல.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விண்வெளித்துறையில் தனியார் துறைகளின் பங்களிப்புக்கு ஒப்புதல் அளித்து சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போதில் இருந்து 100 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கிவிட்டன.
இந்த சூழலில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானது, (Indian Space Research Organization) ஐஎம்எஸ் - 1 செயற்கைக்கோள் பஸ் தொழில்நுட்பத்தை (IMS-1 Satellite Bus Technology) கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஆகஸ்ட் 2ஆம் தேதி இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited) தலைமையகத்தில் போடப்பட்டுள்ளது.
இந்த ஐஎம்எஸ் - 1 செயற்கைக்கோள் பஸ் தொழில்நுட்பத்தை, ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தனியார் நிறுவனங்கள் செயற்கைகோள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைப்பது உறுதியாகி விட்டது.
ஐஎம்எஸ் - 1 செயற்கைக்கோள் பஸ் தொழில்நுட்பம் என்றால் என்ன?: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும், யு ஆர் ராவ் சாட்டிலைட் சென்டர் (U R Rao Satellite Centre) மூலம், இந்தியன் மினி சாட்லைட் பஸ் (Indian Mini Satellite Bus) தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதை வைத்து, மிகவும் குறைந்த செலவிலும், எடையிலும் செயற்கைக்கோள்களை உருவாக்க முடியும். இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்கள் சேகரிப்பு, கடல் மற்றும் வளிமண்டலம் சார்ந்த ஆய்வுகள், மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங் (Microwave Remote Sensing) மற்றும் பேஸ் சையின்ஸ் மிஷன்ஸ் (Space Science Missions) போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுப்படும்.
இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் 100 கிலோ எடை மட்டுமே கொண்டிருக்கும். அதில் 30 பேலோட் (payload), 30-42 வோல்டேஜ் சோலார் அர்ராய்ஸ் (Solar Arrays) இடம்பெற்றிருக்கும். இந்த சோலார் அர்ராய்ஸ் மூலம் செயற்கைக்கோளுக்கு தேவையான 330W பவர் ஜென்ரேட் செய்யப்படும். இவையெல்லாம் மிகப்பெரும் செலவை ஏற்படுத்தக்கூடியது கிடையாது என்பதால், தனியார் துறைக்கும் கொடுத்துள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்பத்தை வாங்கிய ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கிறது. ஏற்கனவே, இந்த நிறுவனம் பாதுகாப்பு (Defense), விண்வெளி (Space) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு (Homeland Security) சார்ந்த இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களில் முக்கியப் பங்காற்றி இருக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில், முக்கியமான செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








