கோயிந்தா, கோயிந்தா.. விண்வெளியில் இருந்து திருப்பதி கோவிலை கண்காணிக்கும் ISRO சாட்டிலைட்.. ஏன்?
ஒட்டுமொத்த உலக நாடுகளும் வாய் பிளக்க வைக்கும் படியான, பல சாதனைகளை செய்துள்ள இஸ்ரோவிற்கு (ISRO) இதெல்லாம் ஒரு விஷயமா என்று கூறும்படியாக ஒரு வேலை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைகோள் ஒன்று - திருமலை திருப்பதி கோவிலை கண்காணிக்க உள்ளது!
இந்த மாத இறுதியில், திருப்பதி கோவிலில் தொடங்கும் ஒன்பது நாள் "பிரம்மோற்சவ" விழாவின் போது, பக்தர்களின் வருகையை மதிப்பிடுவதற்கு, திருமலை கோயில் வாரியம் ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.

இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அறக்கட்டளை வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வழக்காக ஒவ்வொரு நாளும் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து சராசரியாக 70,000 முதல் 80,000 பக்தர்களை ஈர்க்கும் திருப்பதி கோவிலானது பிரம்மோற்சவ விழாவின் போதும் மேலும் பல ஆயிரம் பக்தர்களின் வருகையை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரம்மோற்சவத்தின் போது பக்தர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, முதல் முறையாக இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நிகழ்நேர கூட்ட கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப ஆதரவை எல் அண்ட் டி நிறுவனம் வழங்க உள்ளது.
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், தடையற்ற ஏற்பாடுகளை உறுதி செய்யவே டிடிடி வாரியம் மேற்கண்ட முடிவுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வேறு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன? 2025 திருமலை திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்விற்காக, நெரிசலான பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் (Extra CCTV Cameras) பொருத்தப்பட உள்ளன. மேலும் குழந்தைகள் தொலைந்து போகாமல் தடுக்க ஜியோ-டேக்கிங் விரிஸ்ட்பேண்ட்கள் (Geo-tagging wristbands) வழங்கப்படும்.
பிரம்மோற்சவ நிகழ்விற்காக, தடையில்லா மின்சாரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாஹன சேவைகளும் ஹை-டெபினிஷன் (HD) தரத்தின் கீழ் உலகம் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்படும். பிரம்மோற்சவ நாட்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ள பெற்றோருக்கான சிறப்பு தரிசன சலுகைகள் நிறுத்தப்படும். இடைவேளை தரிசனம் நெறிமுறை பிரமுகர்களுக்கு மட்டுமே இருக்கும்.
மேலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கும். செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு 9 மணி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை 6 மணி வரை திருமலை திருப்பதிக்கு இரு சக்கர வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்படும். தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தினமும் சுமார் எட்டு லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும். கருட சேவை நாளில் (செப்டம்பர் 28), நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மோர் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.
கண்டிப்பாக - ஒட்டுமொத்த திருமலை திருப்பதியுமே ஜொலிஜொலிக்கும். திருப்பதி கோவில் முழுவதும் விரிவான மலர் அலங்காரங்கள், பிரமாண்டமான எல்இடி (LED) தோரணங்கள் மற்றும் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு ஆன்மீக காட்சிகளை வழங்கும்.
வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று, ஆந்திர முதலமைச்சர், பாக்-5 (PAC-5) ஸ்ரீனிவாச நிலையம் என்ற புனித யாத்திரை வசதி வளாகத்தை திறந்து வைக்க உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட 10,000 யாத்ரீகர்கள் தங்கும் வகையில் - நவீன காத்திருப்பு அரங்குகள், சாப்பாட்டு வசதிகள், ஓய்வறைகள் மற்றும் 'அன்ன பிரசாதம்' கவுண்டர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications