இஸ்ரோ: விக்ரம் லேண்டரின் ஆயுள் முடிந்தது! ஆனாலும் சந்திரயான் 2 ஆராய்ச்சி தொடரும்!
சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவடைகிறது. சந்திரனில் கடும் குளிர்காலம் என்றழைக்கப்படும், கடுமையான குளிர் வெப்பநிலை மாற்றம் இன்று முதல் ஆரம்பம் ஆகவுள்ளது. இந்த கடும் குளிர்காலத்தில் விக்ரம் லேண்டர் உறை பனியில் உறைந்து வேலை செய்ய முடியாமால் போய்விடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தென் துருவத்தில் செயலிழந்த விக்ரம் லேண்டர்
இந்தியாவின் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் பொழுது செயலிழந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம்தளராமல் நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பைப் பெறப் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம்
இருப்பினும் இஸ்ரோவின் எந்த ஒரு முயற்சிக்கும் விக்ரம் லேண்டர் பதில் அளிக்கவில்லை. இன்றுடன் விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுள் காலம் நிறைவடைகிறது. நிலவில் 14 புவி பகல்கள் முடிந்து, நாளை முதல் நிலவின் பகுதியில் 14 புவி இரவு நாட்கள் துவங்குகிறது.

கொடூரமான நிலவின் கடும் குளிர் காலம்
இந்த குறிப்பிட்ட 14 புவி இரவு நாட்களில், நிலவில் கடுமையான உறை வெப்பநிலை மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் குளிர் காலம் என்றழைக்கப்படும், இந்த காலகட்டத்தில் நிலவில் மைனஸ் 200 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கடும்பணி நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பாதிப்படையும் என்று முன்பே இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இயந்திர பாகங்களை சேதமடைய செய்யும் உறைபனி
இத்தகைய கடுமையான அதீத குளிர் வெப்பநிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் செயல்பட முடியாது. குறிப்பாக விக்ரம் லேண்டரின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன்கள் செயலிழந்து, பிரக்யான் ரோவராலும் வேலை செய்யாமல் போய்விடும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் முயற்சிகள் தோல்வி ஆனலும் வாழ்த்துக்கள்
எனவே விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுள் இன்றுடன் நிறைவடைகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் தொடர்பை மீட்க மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானிகளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் மக்களின் மனதில் இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மட்டுமே நிலைத்திருக்கிறது.

அடுத்த 7 வருட காலத்திற்குச் ஆராய்ச்சி தொடரும்
இருப்பினும் சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடையவில்லை, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்பிட்டரை வைத்து நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில் இறங்கி உள்ளனர். அடுத்த 7 வருட காலத்திற்குச் சந்திரயான்- 2வின் ஆர்பிட்டர், நிலவை தொடர்ந்து ஆராய்ச்சி செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே உருவாகியுள்ள கேள்வி
இதன் மூலம் இன்றுடன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவின் தென்துருவதில்ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடை பெறுவது உறுதியாகியுள்ளது. இஸ்ரோ 2022 ஆம் ஆண்டில் மனிதர்களை ககன்யான் திட்டத்தின் பெயரில் நிலவிற்கு அனுப்புகிறது. அப்பொழுது மீண்டும் விக்ரம் லேண்டரை இஸ்ரோ கைப்பற்றுமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications