வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த PSLVC50 ராக்கெட்.. விண்ணுக்கு அனுப்பப்பட்ட CMS01 சாட்டிலைட் எதற்காக தெரியுமா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'இஸ்ரோ (ISRO)' வெற்றிகரமாகத் தனது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் எதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்டது, வரும்காலத்தில் இதன் பலன்கள் என்னவாக இருக்கும் என்பது போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சிஎம்எஸ்-1 என்ற புதிய செயற்கைக்கோள்
தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, அதிநவீன சிஎம்எஸ்-1 என்ற புதிய செயற்கைக்கோளை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து இன்று பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவின் 41 செயற்கைக்கோள்
தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை இந்தியா 41 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த விண்ணுக்கு அனுப்பப்பட்ட இறுதி செயற்கைகோள் கடந்த 2011 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஜிசாட்-12 என்ற செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது இஸ்ரோ புதிதாக சிஎம்எஸ்-1 என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அடுத்த 7 ஆண்டு காலத்திற்கு செயலில் இருக்கும் CMS01
அடுத்த 7 ஆண்டு காலத்திற்கு இந்த செயற்கைகோள் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை கண்காணித்து பூமிக்கு அனுப்பும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு இறுதிக்கட்ட 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. இந்த கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், இன்று மாலை சரியாக 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

வெற்றிகரமாகப் பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது
விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். திட்டமிட்டபடி சரியான நேரத்தில் செயற்கைகோளுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் நான்காவது கட்டத்திலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications