5 நாள் ஆகிடுச்சு.. ISRO விஞ்ஞானிகள் நினைச்சது ஒன்னு.. ஆனா நடந்தது ஒன்னு.. Chandrayaan-3 கதை முடிஞ்சது?
சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் தரை இறங்கிய நாள் முதல்.. ஒவ்வொரு நகர்விலும்.. ஒவ்வொரு அசைவிலும்.. ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சிலிர்ப்படைய செய்த, பெருமைப்பட செய்த இஸ்ரோவின் சந்திராயன்-3 மிஷனின் (Chandrayaan-3 Mission) கதை முடிந்து விட்டது என்பது போல் தெரிகிறது.
ஏனென்றால், இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organization) சந்திரயான்-3 மிஷன் மீண்டும் "விழித்து கொள்ளும்" என்கிற நம்பிக்கை. நாளுக்கு நாள் குறைந்து.. இப்போது அந்த நம்பிக்கை சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று, நிலவின் தென்துருவத்தில் சூரிய உதயமாகும் போது, அங்கே சூரிய ஒளி நிரம்பி வழியும் போது, அங்கே தரையிறங்கிய விக்ரம் லேண்டரும் (Vikram Lander), பிரக்யான் ரோவரும் (Pragyan Rover) மீண்டும் "விழித்தெழும்" என்று இஸ்ரோ எதிர்பார்த்தது.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஒவ்வொரு மணி நேரமும் கடக்கும் போதும் அவைகள் மீண்டும் செயல்பட தொடங்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது. தற்போது நிலவின் தென் துருவத்தில் சூரிய உதயமாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இன்னமும் உறக்கத்திலேயே உள்ளதால், அவைகளின் கதை முடிந்து விட்டது என்பது போல் தெரிகிறது
சந்திரயான்-3 மிஷன் அதன் முக்கியமான அறிவியல் நோக்கத்தை (Science Objective) நிறைவு செய்த பிறகு, சந்திர கிரகத்தில் ஏற்பட்ட சூரிய அஸ்தமனத்திற்கு முன், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் கருவிகளின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தப்பட்டு, அவைகள் ஸ்லீப் மோட்-இல் (Sleep Mode) வைக்கப்பட்டன.
இப்படி செய்வதன் மூலம் சந்திரயான்-3 மிஷனின் ஆயுளை நீட்டிக்கலாம், மீண்டும் அங்கே சூரிய உதயம் வந்ததும் விக்ரம் லேண்டரும் மற்றும் பிரக்யான் ரோவரும் மீண்டும் கண்விழிக்கும் என்று இஸ்ரோ நம்பியது. ஸ்லீப் மோடில் இருந்து வெளியேறி, மீண்டும் செயல்பாட்டால் மேலதிக ஆய்வுகளை நடத்தலாம் என்பதே இஸ்ரோவின் திட்டம்.
ஆனால் உண்மை என்னவென்றால், இவைகள் சுமார் 14 பூமி நாட்கள் (நிலவில் 1 நாள்) செயல்படும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டன. மேலும் விக்ரம் மற்றும் பிரக்யானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சந்திரனில் நிலவும் மிகவும் தீவிரமான இரவு நேர நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
இரவு நேரத்தில் சந்திர கிரகமானது இருளில் மூழ்கும் என்பதால் சூரிய சக்தியில் இயங்கும் மிஷன்களுக்கு மின்சாரம் கிடைக்காது. மேலும் இரவு நேரங்கில் சந்திர கிரகத்தின் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரிக்கு கீழே குறையும். இப்படிப்பட்ட குளிரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதலில் உறைந்து, அதை தொடர்நது செயல்படாதபடி அழிந்தும் போகலாம்.
இருப்பினும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள், இதுபோன்ற தீவிரமான நிலைமைகளை தாங்கி, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆனது செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மீண்டும் செயல்படும் என்று நம்பினர். சூரிய ஒளியானது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய வாய்ப்பளிக்கும் என்று நம்பினர்.
ஆனால் இதுவரையிலாக அப்படி எதுவுமே நடக்கவில்லை. இஸ்ரோவால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்பு கொள்ள முடியவில்லை மற்றும் அவைகள் மீண்டும் கண்விழிக்கும் என்கிற நம்பிக்கைகளும் மங்கி வருகின்றன. முதலில் இப்படியான உறைபனி வெப்பநிலையை தாங்கிக்கொள்ள 50-50 வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. இப்போது அதுவும் இல்லை!
சந்திரயான்-3 மிஷன் ஆனது அதன் வாழ்நாளை கடந்தும், மீண்டும் விழிக்கவில்லை என்றாலும் கூட, அது மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் (Soft Landing) செய்த முதல் நாடு என்கிற பெருமைக்கு இந்தியா சொந்தமாக சந்திரயான்-3 தான் காரணம்.
மேலும், பிரக்யான் ரோவர் ஆனது சுமார் 100 மீட்டர் தூரம் பயணித்து நிலவில் பல வகையான தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மிக முக்கியமாக, பிரக்யான் ரோவர் ஆனது அங்கே கந்தகம் (Sulfur) இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது. இது வேறு எந்த நாட்டின் மூன் மிஷன்களின் வழியாகவும் கண்டறியப்படாத ஒரு விஷயமாகும்!


Click it and Unblock the Notifications








