Jio சொல்லும் புதிய வழி.. கடைக்கு போய் ரீசார்ஜ் பண்ணுங்க.. ரூ.50 மிச்சமாகும்.. எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ (Jio), பாரதி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே சந்தையில் கிடைக்கும் மலிவான திட்டங்களை அமைதியாக நீக்கி வருகின்றன. முன்னதாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே ரூ.249 திட்டத்தை நீக்கின; சமீபத்தில் வோடாபோன் ஐடியாவும் ரூ.249 திட்டத்தை நீக்கியது.
மேற்கண்ட மூன்று ரூ.249 திட்டங்களுமே டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்கள் ஆகும். இவைகளின் நீக்கம் - வாடிக்கையாளர்களை 1.5ஜிபி அல்லது 2ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை நோக்கி நகர்த்துகிறது. இதற்கிடையில் ஜியோவின் ரூ.249 ஆனது இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெலிகாம்டால்க் (TelecomTalk) வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இன்னமும் ஜியோவின் ரூ.249 திட்டத்துடன் பயனர்கள் ரீசார்ஜ் செய்யலாம் என்று ஜியோ கூறுகிறது. இருப்பினும் அதை செய்ய அவர்கள் கடைக்கு செல்ல வேண்டும். நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஸ்டோர்கள் (Jio Stores) நாடு முழுவதும் உள்ளன.
ஆக ரூ.249 க்கு அடுத்தபடியாக 28 நாட்களுக்கு டெய்லி 1.5ஜி டேட்டாவை வழங்கும் ரூ.299 மதிப்புள்ள ஜியோ திட்டத்தை ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக, ஜியோ கடைகளுக்கு சென்றால் ரூ.249 திட்டத்தை ரீசார்ஜ் செய்து, பேஸிக் ரீசார்ஜ்ஜில் ரூ.50 மிச்சப்படுத்தலாம் என்பது போல் தெரிகிறது. இதேபோல ஜியோவின் ரூ.209 ரீசார்ஜ்திட்டமும் மறைந்து இருக்கிறது.
ரூ.249 நீக்கப்பட்டதும் ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டங்களும் இல்லாதது போல, ஜியோ ரீசார்ஜ் தளத்தில் இருந்து டெய்லி 1ஜிபி பிளான் (Daily 1GB Plan) பிரிவு காணாமல் போனது. அதாவது ரூ.209 க்கு 22 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டா வழங்கிய திட்டம் காணாமல் போனது.
ஆனால் இதை கைமுறையாக சேர்ச் (Search) செய்தால். அதாவது ஜியோ ஆப்பில் உள்ள சேர்ச் பாரில் 209 என்று டைப் செய்தால்.. உங்களுக்கு இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். வோடாபோன் ஐடியாவும் கூட ரூ.249-ஐ நீக்கிவிட்டது. ஆனால் அது இன்னமும் ரூ.100 க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டம், ரூ.239 மதிப்பிலான திட்டத்தை வழங்கி கொண்டுதான் இருக்கிறது. ஆக இங்கே "செஸ் போட்டி" நடந்துகொண்டே தான் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தான் "செஸ் காய்கள்"!
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய 3 டெலிகாம் நிறுவனங்களுமே மலிவான திட்டங்களை நீக்குவதன் மூலம் மறைமுகமான கட்டண விலை உயர்வை அமல்படுத்துகின்றன. இப்படி செய்வதன் மூலம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்ககளின் ஏஆர்பியு (ARPU - சராசரி பயனருக்கான வருவாய்) அதிகரிக்கும்; லாபம் மேம்படும்; மேலும் இது ஏபிட்டா (Ebitda - வட்டி வரி தேய்மானம் மற்றும் கடன் தள்ளுபடிக்கு முந்தைய வருவாய்) மீது நேர்மறையான விளைவு இருக்கும்!
இதையெல்லாம் டிராய் (TRAI - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பொருட்படுத்தவும் இல்லை. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பேஸிக் லெவல் ரீசார்ஜ்களை (ரூ.249 திட்டத்தை நீக்குவதை) டிராய் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தவும், அவர்களின் விருப்பப்படி அவற்றை திரும்பப் பெறவும் உரிமை உண்டு.
ஆக வரும் மாதங்கள் அல்லது 2026 இல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் அடிப்படை ரீசார்ஜ் கட்டணங்களை எப்படி எல்லாம் உயர்த்தும் அல்லது எப்படி எல்லாம் மாற்றி அமைக்குமோ என்பதை நினைத்தால் - இப்போதே பயமாக இருக்கிறது. நல்லவேளையாக இப்போதைக்கு 5ஜி திட்டங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை; அதுவும் வரும்போது, பட்ஜெட் வாசிகளின் பாக்கெட்களில் இன்னும் பெரிய-பெரிய ஓட்டைகள் விழும்!


Click it and Unblock the Notifications








