மரக்கைப்பிடியுடன் இரும்பு வாளும் உடனிருந்த மனித எலும்புகளும்- கொந்தகை அகழாய்வு சொல்வது என்ன?
கீழடி, கொந்தகை , அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு குழியில் இருந்த முதுமக்கள் தாழியில் இருந்து மரக் கைப்பிடியுடன் கூடிய இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வாளின் மொத்த அளவு 40 செமீ நீளமும், இதன் கைப்பிடியானது 6 செமீ நீளமும் கொண்டுள்ளது.

முதுமக்கள் தாழியில் இருந்த மனித எலும்புகள்
இந்த முதுமக்கள் தாழியில் இருந்து மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள இந்த வாள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா பீட்டா அனெல்டிக்ஸ் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

கீழடியில் பழந்தமிழர்களின் மேம்பட்ட வாழ்க்கை
சிவகங்களை மாவட்டம் கீழடியில் பழந்தமிழர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கான சான்றுகள் குறித்து அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, கல்உழவு கருவி, சுடுமண் பகடை உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வானது கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. மேலும் கீழடியில் தங்கத்தால் ஆன பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
வணிகத்திற்கு சான்றாக இந்த வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த நாணயம் கிமு 200 முதல் 600 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நாணயம், பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை அறிய ஆய்வுக்கு அனுப்ப உள்ளனர்.
இந்த நாணயம் சதுரவடிவில் இருக்கிறது. இந்த நாணயத்தின் இருபுறத்திலும் சூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது முத்திரை நாணயமாக இருக்கலாம் என அகழாய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வைகை நதி கரையோர நகரான கீழடியில் வணிகம் நடந்ததற்கு சான்றாக முன்னதாகவே ரோமானிய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணங்கள்
இதற்கு முன்பு நடப்பட்ட 6 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சியில் பண்டைய கால பாசிமணிகள், சிறிய, பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணங்கள், விலங்கின் எலும்புகள், மனிதர்களின் எலும்புக்கூடுகள் மற்றும் சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைக் கிணறு
தமிழர்களின் பெருமிதத்தை அதிகரிக்கும் படி, 2000 ஆண்டுகள் பழமையான உரை கிணறு போன்ற தொட்டி கிடைத்துள்ளது.கீழடியில் நடத்தப்பட்டு வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய, சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைக் கிணறு போன்ற தொட்டி வடிவிலான ஒரு பொக்கிஷம் கிடைத்துள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தண்ணீர் தொட்டியாக இருக்கலாம் என கணிப்பு
அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படும் இந்த சுடுமண் வடிவிலான தொட்டி ஒரு தண்ணீர் தொட்டியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இன்னும் சிலர் இது உரை கிணற்றின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். கீழடியில் கிடைக்கப்பெற்ற இந்த சுடுமண்ணால் ஆனா அழகிய நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தொட்டியைக் காண அந்த பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு அழகிய பொக்கிஷத்தை பண்டையர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
File Images


Click it and Unblock the Notifications